Saturday, December 15, 2012

பஸ்களில் 1,180 ஆசிரியர்கள், குடும்பத்தினர் பயணம்

திருநெல்வேலி:நெல்லை மாவட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரிய பணி நாடுனர்கள் 24 சிறப்பு பஸ்களில் நெல்லையில் இருந்து சென்னைக்கு நேற்று புறப்பட்டு சென்றனர்.ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆன்லைன் கவுன்சிலிங் கடந்த 9ம் தேதி ஆரம்பமானது. அன்று பட்டதாரி ஆசிரியர் பணி நாடுனர்களுக்கு உள் மாவட்ட அளவிலும், 10ம் தேதி வெளி மாவட்ட அளவிலும் ஆன்லைன் கவுன்சிலிங் நடந்தது. நேற்று முன்தினம் காலையில் இடைநிலை ஆசிரியர் பணி நாடுனர்களுக்கு உள் மாவட்ட அளவிலும், தொடர்ந்து விடிய, விடிய வெளி மாவட்ட அளவிலும் கவுன்சிலிங் நடந்தது.இப்பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரிய பணி நாடுனர்கள் நெல்லை டவுன் சாப்டர் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இருந்து நேற்று மதியம் புறப்பட்டனர். இதற்காக நேற்று காலையில் இருந்தே குடும்பத்துடன் ஆசிரிய பணி நாடுனர்கள் நெல்லையில் குவிந்த வண்ணம் இருந்தனர்.பின்னர் நேற்று மதியம் 1.30 மணிக்கு 21 பஸ்கள் புறப்பட்டு சென்றன. நேற்று மாலைக்குள் மேலும் 3 பஸ்களும் புறப்பட்டு சென்றன. இதில் 750 ஆசிரிய பணி நாடுனர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட மொத்தம் 1,180 பேர் நெல்லையில் இருந்து புறப்பட்டு சென்றனர். ஒவ்வொரு பஸ்சிலும் 50 பேர் வீதம் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஏ.இ.ஓ, என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளரும் சென்றனர்.
இதில் ஒரு சில பஸ்கள் தாமதமாக வந்ததால் ஆசிரிய பணி நாடுனர்கள் புறப்பட்டு செல்வதிலும் காலதாமதம் ஏற்பட்டது. ஆசிரிய பணி நாடுனர்களுடன் குடும்ப உறவினர்கள் தவிர ஒரு சிலர் பஸ்சில் ஏறியதால் "திடீர்' குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் அவர்களை வெளியேற்றினர்.
சென்னையில் இன்று (13ம் தேதி) நடக்கும் "மெகா' விழாவில் ஆசிரிய பணி நாடுனர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கி பேசுகிறார்.தொடர்ந்து இன்று மாலையில் சென்னையில் இருந்து அந்தந்த மாவட்டங்களுக்கு ஆசிரிய பணி நாடுனர்கள் புறப்பட்டு செல்கின்றனர்.

Thursday, November 22, 2012

தகுதிதான் அடிப்படை!-தினமணி


ஆசிரியர் தகுதித் தேர்வு அண்மையில் நடத்தப்பட்டபோது, தேர்வு எழுதியவர்களில் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அப்போது தேர்வு எழுதியவர்கள் பலரும் வினாத்தாள் கடினமாக இருந்தது என்று கருத்துத் தெரிவித்ததால், மீண்டும் ஒருமுறை தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்விலும் சுமார் 3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இரண்டு முறையும் தேர்ச்சி விகிதம் குறைவு என்பதால் இந்தத் தேர்வு முறை தவறு என்று ஆசிரியர் அமைப்புகள், கூட்டணிகள் சார்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டு, தகுதித்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.
ஆனால், அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் அவர்கள் கோரிக்கைக்கு
வலு சேர்ப்பதாக இல்லை.
வினாத்தாள் கடினம் என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. 6 லட்சம் பேர் தேர்வு எழுதும்போது, வினாத்தாள் கடினமாகத்தான் இருக்க முடியும். அதற்காகத்தான் அதை "தகுதித் தேர்வு' என்று அழைக்கிறார்கள்.
இந்த அமைப்புகள் எழுப்பும் இன்னொரு கேள்வி, ஒரு தமிழாசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர் ஏன் மற்ற பாடங்களின் கேள்விக்குப் பதில் எழுத வேண்டும், ஆங்கில ஆசிரியர் பணியேற்கப்போகிறவர் ஏன் தாவரவியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான். மேலும், பி.எட். பாடத்திட்டத்திலிருந்து அதிகக் கேள்விகள் இடம்பெறுகின்றன என்ற முணுமுணுப்பும் உண்டு. இதில் எந்தவித நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.
இவர்கள் பணியாற்றப்போவது கல்லூரியில் அல்ல, பள்ளிகளில் பணியாற்றப் போகிறவர்கள். தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் 90 சதவீதம் புறநகர்ப் பகுதிகளில் இருப்பவை. பல நடுநிலைப் பள்ளிகளிலும் மேனிலைப் பள்ளிகளிலும் ஒரே ஆசிரியர் இரண்டு பாடங்களை எடுக்க வேண்டிய தேவையும் பொறுப்பும் இருக்கிறது.
மேலும், ஒரு மாணவன் ஓர் ஆசிரியரைத் தனக்குத் தெரியாத அனைத்தும் தெரிந்தவராக மதிக்கிறார். அனைத்துப் பாடங்களிலும் ஆசிரியருக்குத் தேர்ச்சி இல்லாவிட்டாலும், அந்நிலையில் அவர் கேட்கும் கேள்விகளுக்கு, குறைந்தபட்சம் அதற்கான சரியான விடையை எங்கே தேடலாம் என்கின்ற அறிவு படைத்தவராக ஆசிரியர் அமைய வேண்டும். இதுதானே நியாயமான எதிர்பார்ப்பாக இருக்க முடியும்?
அதைக் கருதியே, பல்வேறு பாடங்களில் இருந்தும் அடிப்படைக் கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன. இதையும்கூட தவறு என்று சொல்வார்கள் என்றால், அவர்கள் கல்லூரி விரிவுரையாளர்களாகப் பணியாற்ற முயற்சி செய்யலாமே தவிர, பள்ளிகளில் பணியாற்ற வேண்டியதில்லை.
இந்த இரண்டு தகுதித் தேர்வுகளிலும் அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது என்னவென்றால், வெற்றி பெற்றிருப்போர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுதான். அதாவது, தொடர்ந்து படித்துக்கொண்டும், தனியார் பள்ளிகளில் பாடம் நடத்திக்கொண்டும் இருப்போர் மட்டுமே இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். பட்டம் மட்டும் வாங்கிக்கொண்டு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துவிட்டு, பதிவுமூப்பு அடிப்படையில் வேலை கிடைத்துவிடும் என்று எதையும் படிக்காமல் சும்மா இருந்தவர்களால் இத்தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இதுதான் மிகவும் கசப்பான உண்மை.

இந்த உண்மையை ஏற்கவும், ஆன்ம பரிசோதனை நடத்தவும் முயல வேண்டிய ஆசிரியர் அமைப்புகள், கூட்டணிகள், அதற்கு மாறாக பணம் கொடுத்துதான் இவர்கள் தேர்ச்சி பெற்றார்கள் என்று சொல்வது தங்களைத் தாங்களே தரம் தாழ்த்திக் கொள்வதற்கு ஒப்பாகும். அறிவால் தேர்ச்சி பெற்றவர்களை வெறும் காழ்ப்புணர்ச்சியால் இதைவிடக் கொச்சைப்படுத்தும் செயல் வேறு ஏதும் இருக்க முடியாது.
தகுதித் தேர்வுகள் மிகவும் இன்றியமையாதது என்பதும், குறிப்பாக ஆசிரியர் பணிக்கு அறிவுத்திறன் சோதனை அவசியமானது என்பதும் மேலும்மேலும் உறுதிப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆகவே, தமிழக அரசு இத்தகைய அடிப்படையற்ற விமர்சனங்களுக்காக அச்சப்படாமல், தகுதித் தேர்வைத் தொடர்ந்து முறைப்படி, நடத்தவும், அதில் தேர்ச்சி பெறுவோரை மட்டுமே பணியமர்த்தவும் செய்தல் வேண்டும். அதுமட்டுமே அடுத்த தலைமுறைக்கு நல்ல ஆசிரியர்களை வழங்கும் செயலாக இருக்கும்.
மேலும், தற்போதைய ஆசிரியர்கள் எந்த அளவுக்குத் தங்கள் பாடங்களில் ஆழமும் விரிவும் கொண்ட அறிவுப்புலம் பெற்றிருக்கிறார்கள் என்பது இன்றியமையாத கேள்வி. ஒருமுறை பணியில் சேர்ந்துவிட்டால், அந்த ஆசிரியருக்குச் சம்பளம் மட்டுமே வழங்க வேண்டும் என்பது எந்த நாட்டிலும் இல்லாத ஒரு நடைமுறை. ஆகவே, ஆசிரியர்கள் அனைவருக்கும், அவர்கள் பணியில் சேர்ந்த பிறகு, ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை, சுய ஆய்வுத் தேர்வு ஒன்றை நடத்துவது அவசியமாகிறது.
காலத்துக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொண்டிருக்கிறார்களா, இவர்களுக்குத் தாங்கள் நடத்தும் பாடப்புத்தகத்தில் உள்ள விஷயங்களாகிலும் முழுமையாகத் தெரிந்திருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள இத்தகைய சுய ஆய்வுத் தேர்வு அவசியம். அந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர்களாகத் தொடர அனுமதிக்க வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பது உறுதி. ஆனாலும், ஓர் ஆசிரியர் காலத்தால் பின்தங்கிவிட்டு, ஒரு மாணவனுக்கு எப்படி அறிவு புகட்ட முடியும்? தகுதியற்ற ஒருவருக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வழங்கிக் கொண்டிருப்பது எந்த வகையில் நியாயம்?
ஒரு சாதாரண தொழிலாளிக்கும்கூட புதிய இயந்திரங்களில் பயிற்சி அளித்து அவரைத் தரப்படுத்துகிறார்கள். மருத்துவர்கள், பொறியாளர்கள் தங்கள் துறையின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் புத்தாக்கப் பயிற்சிகள் மூலம் வளர்த்துக்கொள்கிறார்கள். ஓர் ஆசிரியர் காலத்துக்கேற்ற அறிவுப்புலம் கொண்டிருக்கிறாரா என்பதை அறிய சுயஆய்வுத் தேர்வு நடத்துவதில் என்ன தவறு?

Saturday, November 17, 2012

பி.எட்., எம்.எட்., படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு



சென்னை: பி.எட்., - எம்.எட்., உள்ளிட்ட, ஆசிரியர் கல்வி படிப்பு சேர்க்கைக்கு, நுழைவுத்தேர்வு முறையை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
நீதிபதி வர்மா குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த பரிந்துரைக்கு, கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில், ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், ஆசிரியர் கல்வியில் கொண்டு வர வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும், தரமான ஆசிரியரை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்து, பரிந்துரை அறிக்கை வழங்க, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி வர்மா தலைமையில் குழு அமைத்து, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. வர்மா குழு, சமீபத்தில், தன் பரிந்துரையை, மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

பரிந்துரையில், "தரமான கல்வியை அளிக்க வேண்டும் எனில், தரமான ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும். அதற்கு, பி.எட்., - எம்.எட்., மற்றும் ஆசிரியர் கல்வி பட்டய படிப்பு ஆகிய ஆசிரியர் கல்வி படிப்பு சேர்க்கையில், நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்த வேண்டும்" என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் நடந்த, முதல், டி.இ.டி., தேர்வை, கிட்டத்தட்ட, ஏழு லட்சம் பேர் எழுதிய போதும், 1 சதவீதத்திற்கும் குறைவாக, வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்வு பெற்றதை, வர்மா குழு சுட்டிக் காட்டி, நுழைவுத் தேர்வின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தின் நிலைப்பாடு:
  வர்மா குழுவின் பரிந்துரை அறிக்கை, சமீபத்தில், டில்லியில் நடந்த கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில் வைக்கப்பட்டு, வாரியத்தின் ஒப்புதலும் பெறப்பட்டது. கூட்டத்தில், பல்வேறு மாநில பிரதிநிதிகள், ஆசிரியர் கல்விக்கான நுழைவுத் தேர்வு திட்டத்தை ஆதரித்துள்ளனர். ஆனால், இந்தவிவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாடு தெரியவில்லை.
30 ஆயிரம் மாணவர்கள்
தமிழகத்தில், 700 ஆசிரியர் கல்வி கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், ஆண்டுதோறும், 40 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு படிப்புகளில், 30 ஆயிரம் பேர் வரை சேர்கின்றனர். இந்த படிப்புகளின் சேர்க்கைக்கு, தற்போது நுழைவுத்தேர்வு கிடையாது.
ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு விண்ணப்பதாரர்கள், பட்டப் படிப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில், தேர்வுப் பட்டியலை வெளியிட்டு, கலந்தாய்வு அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இந்த முறையால், தரமான ஆசிரியரை தேர்வு செய்ய முடியாது என்பதை, டி.இ.டி., தேர்வு, வெட்ட வெளிச்சமாக்கி விட்டது. எனவே, நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து, உயர்கல்வித் துறை தீவிரமாக ஆலோசித்து வருவதாக, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக அரசின் நிலைப்பாடு குறித்த அறிவிப்பு, அடுத்த கல்வியாண்டு சேர்க்கைக்கு முன்னதாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொதுச் செயலர் பிச்சாண்டி கூறியதாவது:
 கலை, அறிவியல் பட்டதாரிகள் மட்டுமே, பி.எட்., - எம்.எட்., படிப்புகளில் ஆர்வம் காட்டுகின்றனர். நுழைவுத் தேர்வு திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், கல்லூரி பாடத் திட்டங்களின் தரத்தை உயர்த்த வேண்டும்.  இல்லை எனில், நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே, ஆசிரியர் கல்விக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவர். கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் நிலை, கேள்விக்குறி ஆகிவிடும்.
இவ்வாறு பிச்சாண்டி தெரிவித்தார்.

Tuesday, November 13, 2012

தகுதி மதிப்பெண்ணை, 55 சதவீதமாக நிர்ணயிக்கக் கோரி, அரசுக்கு மனு

நாமக்கல் மாவட்டம், அனங்கூரைச் சேர்ந்தவர் சங்கீதாஅருந்ததியின சமூகத்தைச் சேர்ந்தவர்ஐகோர்ட்டில், இவர் தாக்கல் செய்த மனு: நான், பிஎஸ்சி, மற்றும் பிஎட், பட்டம் பெற்றுள்ளேன்ஆசிரியர் தகுதி தேர்வில், முதல் தாளில், 5733 சதவீதம், இரண்டாம் தாளில், 5733, சதவீதம் பெற்றேன்60 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு கடிதம் அனுப்பப்பட்டதுஎனக்கு அனுப்பப்படவில்லைஇடைநிலை ஆசிரியர்கள், 7,000 பணியிடங்களுக்கு, முதல் தாளில், 10 ஆயிரத்து 397 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; ஆனால், பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை, 20 ஆயிரம் இடங்கள் தேவைப்படுகின்றன8,849 பேர் தான் தேர்ச்சி பெற்றுள்ளனர்எனவே, பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப, பற்றாக்குறை உள்ளதுஇடஒதுக்கீட்டுப் பிரிவினரைப் பொறுத்தவரை, சலுகைகள் வழங்க, அரசுக்கு அதிகாரம் உள்ளதுபட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களைப் பொறுத்தவரை, ஐந்து சதவீத மதிப்பெண் சலுகை வழங்கினால், அதாவது, 60 சதவீதத்துக்குப் பதில், 55 சதவீத மதிப்பெண் எடுத்தால் போதுமானது, என, இருக்க வேண்டும்எனவே, தகுதி மதிப்பெண்ணை, 55 சதவீதமாக நிர்ணயிக்கக் கோரி அரசுக்கு ,மனு அனுப்பினேன்தகுதி மதிப்பெண்ணில், எனக்கு சலுகை வழங்கி, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்குமாறு உத்தரவிட வேண்டும்
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளதுஇம்மனு, நீதிபதி சந்துரு முன், விசாரணைக்கு வந்ததுமனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆர்நீலகண்டன் ஆஜரானார்மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, அரசு க்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்

மீண்டும் மீண்டும் ஃபெயில்!

மாணவர்களுக்கு இதுவரை ஃபெயில் போட்ட ஆசிரியர்கள், மறுபடிமறுபடி ஃபெயில் ஆகிக்கொண்டு இருக்கிறார்கள். ஏற்கெனவே நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் பல லட்சம் பேர் எழுதி சில ஆயிரம்தான் தேறினர். மறு தேர்வும் அப்படியே ஆகி இருக்கிறது!
தேவையான ஆட்களைத் தேர்வு செய்ய முடியாமலே மீண்டும் ஒருமுறை நடந்து முடிந்திருக்கிறது ஆசிரியர் மறுதகுதித்தேர்வு. கடந்த முறைபோல் இந்த முறை குற்றச்சாட்டுக்கள் அதிகம் இல்லை. ஆனால், தேர்வில் கலந்துகொண்டோருக்கு பல்வேறு விதமான ஆதங்கங்களும் சந்தேகங்களும் இருக்கின்றன.
20,525 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 7,194 இடைநிலை ஆசிரியர்களைத் தேர்வு செய்ய, கடந்த ஜூலை மாதம் ஆசிரியர் தேர்வு ஆணையம் தகுதித் தேர்வை நடத்தியது. அதில் மிகக் குறைந்த பட்சமாக 0.33 சதவிகிதம் பேரே தேர்ச்சி அடைந்தனர். அதனால், அதிர்ந்துபோன தேர்வு ஆணையம் உடனடியாக மறு தேர்வை அறிவித்து கடந்த அக்டோபர் 14-ம் தேதி அதை நடத்தி முடித்தது. முதல்முறை ஆறரை லட்சம் பேரும், இரண்டாம் முறை ஆறே முக்கால் லட்சம் பேரும் தேர்வு எழுதினர். இந்த முறை இடைநிலை ஆசிரியர்கள் தேவைப்படும் அளவுக்கு தேர்ச்சி பெற்றுவிட... பட்டதாரி ஆசிரியர்கள் குறைவாகவே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 20,525 ஆசிரியர்கள் தேவைப்படும் இடத்தில் 8,849 பேர் மட்டுமே பாஸ்.

http://www.vikatan.com/jv/2012/11/mqywuy/images/p37.jpg
இந்த நிலையில்தான் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் மத்தியில் சில குமுறல்கள்...
தமிழ்நாடு பி.எட். பட்டதாரிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியன், ''மத்திய அரசின் கட்டாயக் கல்வி சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் இந்த வருடம் இந்த ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த ஆரம்பித்து இருக்கிறார்கள். இனி,  இந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாமல் யாரும் ஆசிரியராக முடியாது. கடந்த ஜூலை மாதம் தகுதித்தேர்வை நடத்தியபோது கொடுக்கப்பட்ட நேரம் குறைவு. கேள்விகளும் கடினம். அவற்றைச் சுட்டிக்காட்டிய பிறகு இப்போது மறுதேர்வு. இதிலும் குழப்பமான கேள்விகள், பாடத்திட்டத்தின் வெளியில் இருந்து 23 கேள்விகள் இருந்தன. அதனால், இந்த முறையும் தேவையான பட்டதாரி ஆசிரி யர்களைத் தேர்வு செய்ய முடியவில்லை'' என்றார் விளக்கமாக.
பி.எட். பட்டதாரிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், ''மாநில அரசு விரும்பினால் இடஒதுக்கீட்டு அடிப் படையில் மதிப்பெண்களை குறைத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு சொல்லி இருக்கிறது. அதன் அடிப்படையில் தேர்ச்சிக்கான 60 சதவிகிதம் என்பதை 50 சதவிகிதம் வரையிலும் குறைத்தால், தேவைப்படும் பட்டதாரி ஆசிரியர்கள் கிடைத்துவிடு வார்கள். அதை அமல்படுத்தினால், வருடக்கணக்கில் காத்திருக்கும் பல்லாயிரம் ஆசிரியர்கள் வேலைக்குப் போக ஒரு வாய்ப்பு கிடைக்கும். தமிழக அரசு உடனடியாக இதைச் செயல்படுத்த வேண்டும்'' என்கிறார்.
இடைநிலை ஆசிரியர்களோ வேறு வகையில் புலம்பித் தீர்க்கிறார்கள். சிறப்பு இடைநிலை ஆசிரியர்கள் சங் கத்தின் தலைவர் ரவி, ''ஒரு பாடத் திட் டத்தைச் சொல்லி, இதுதான் தேர்வில் வரும் என்றார்கள். ஆனால், அதை விடுத்து வெளியில் இருந்து கேள்விகளைக் கேட்கிறார்கள். எட் டாம் வகுப்பு வரை பாடத் திட்டம் இருக்க வேண்டிய இடைநிலை ஆசிரியர்களின் கேள்வித்தாளில் பி.எட். பாடப்புத்தகத்தில் இருந்து 12 கேள்விகள் இருந்தன. மொத்தமாக 26 கேள்விகள் பாடத்திட்டத்தின் வெளியில் இருந்து கேட்கப்பட்டு இருந்தன. அதை, உரிய ஆதாரங்களோடு தேர்வாணையத்துக்கு எடுத்துச் சென்றும் எந்தப் பதிலும் இல்லை. ஆனால், ஏழு மதிப்பெண்களை மட்டும் அதிகரித்து இருக்கிறார்கள். 26 மதிப்பெண்களையும் முழுதாகக் கொடுத் திருந்தால், கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வரை தேர்ச்சிபெற்று இருப்பார்கள்'' என்கிறார்.
இதுதவிர இன்னொரு சந்தேகமும் ஆசிரியர்கள் மத்தியில் பலமாக உலவுகிறது. 'ஆசிரியர் வேலை வேண்டும் என்றால், இரண்டரை லட்ச ரூபாய் கொடுங்கள். நிச்சயம் வேலை வாங்கித் தருகிறோம்என்று பலரையும் வெளிப்படையாக அணுகிப் பேரம் பேசிக்கொண்டு இருந்தனர் சிலர். அவர்களின் வலையில் விழுந்தவர்கள் அனைவருமே இப்போது நடந்த தேர்வில் வெற்றிபெற்று இருக்கிறார்களாம். அதனால், இந்தத் தேர்வில் பணத்துக்கும் பெரிய பங்கு இருக்குமோ என்றும் ஐயப்படுகிறார்கள்.
இப்படி இரண்டு தரப்பினரும் கோரிக்கைகள் விடுக்க... கல்வித்துறையோ அலட்டிக்கொள்ளாமல் பதில் சொல்கிறது. ''மத்திய அரசின் ஆசிரியர் தேர்வுகளில் மூன்று சதவிதம் பேர்தான் தேர்ச்சி பெறுவார்கள். அப்படி தேர்ச்சி பெற்றால்தான் அது சரியான தேர்வாக இருக்கும். இப்போது நாங்கள் நடத்தி இருக்கும் தேர்விலும் மூன்று சதவிகிதம் பேர்தான் தேர்ச்சி அடைந்து இருக்கின்றனர். இது ஒன்றே தேர்வின் தரத்தைச் சொல்லும். இந்தத்தேர்வு முழுக்க முழுக்க வெளிப் படையாகவும் நேர்மையாகவும் நடந்த தேர்வு. இதில் எந்த முறைகேட்டுக்கும் வாய்ப்பே இல்லை. தேர்வு எழுதியவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு... கேள்விகள் வெளியில் இருந்து கேட்கப்படுகிறது என்பதுதான். அதில் உண்மை இல்லை. பாடத்திட்டத்தில் இருந் துதான் கேட்கப்பட்டது. நுண்ணறிவைச் சோதிக்கும்விதமாக மாற்றிக் கேட்டு இருந்தோம். வல்லுனர் குழுவினர் பரிசீலித்து விட்டு சில மதிப்பெண்களை சேர்க்கச் சொன்னார்கள். அதைச்சேர்த்துத்தான் முடிவு வெளியிட்டு இருக்கிறோம். இடஒதுக்கீட்டு முறை யில்தான் பணி அமர்த்துகிறோம்'' என்கிறார்கள்.
ஆசிரியப் பெருந்தகைகளே... ஒழுங்காக படித்து தேர்வு எழுதி வெற்றிபெறுவதைத் தவிர, இனி உங்களுக்கு வேறு மார்க்கம் இல்லை!
- கரு.முத்து, வீ.மாணிக்கவாசகம்

Saturday, November 10, 2012

TET தேர்வு பெற்ற அனைவருக்கும் வேலை கிடைக்குமா?

தேர்ச்சி பெற மிக கடுமையாக உழைத்து தேர்வில் வெற்றி பெற்ற பின் அனைவருக்கும் வேலை கிடைக்குமா என ஒரு விரிவான அலசல்.

BT Post Vacant List (Previous Collection Data as on July 2012 )
தமிழ்=1778
ஆங்கிலம்=5867
கணிதம்=2606
இயற்பியல்=1213
வேதியியல்=1195
உயிரியல்=518
தாவரவியல்=513
வரலாறு=4185
புவியியல்=1044
தெலுங்கு = 12
உருது=01
மொத்தம்=18932

SG Post Vacant Details = 5451
(Source - ஜூலை தினத்தந்தி நாளிதழ்)

இனி அலசல் !

1. சென்ற சில மாதங்களில் பனி நிரவல் செய்த பிறகு தற்போதைய காலி பணியிடம் எந்த அளவில் மீதம் இருக்கும்?


2. தகுதி தேர்வில் மொத்தமாக வெற்றி பெற்றவர்கள் பட்டியல் மட்டுமே வெளியிடப்பட்டு உள்ள நிலையில் பாட  வாரியாகவும், சாதி இன, மொழி வாரியாகவும் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் இதுவரை வெளியிடப்பட வில்லை.

3. பணியிடத்தை நிரப்பும் போது அரசு இதுவரை சாதி வாரியான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பி வரும் போது தற்போதைய TET தேர்வில் குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்கள் மிக குறைவாக தேர்ச்சி பெற்று இருந்தால் அந்த பணியிடங்களை காலியாக வைக்க இயலுமே தவிர மற்ற இனத்தை சேர்ந்தவர்களை கொண்டு நிரப்ப இயலாது.

4. ஒரு கருத்தை நினைவில் கொள்ள வேண்டும்:-TET பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்ற பலரும் தாள் 1 இலும் வெற்றி பெற்று உள்ள நிலையில் அவர்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு தான் செல்ல விரும்புவர். எனில் இடைநிலை தேர்வில் மிக குறைந்த மதிப்பெண் பெற்ற பலருக்கும் Posting Chance அதிகரிக்கிறது.

5.முதல் TET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் மறு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஒரே நாளில் Online Councelling அந்தந்த மாவட்டத்தில் நடை பெறலாம் . அப்போது முதல் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பணியிட வாய்ப்பு உண்டு. மறு தேர்வில் சான்றிதழ் சரி பார்த்த பின் அவரவர்கள் பெற்ற Weightage மதிப்பெண், தமிழ் வழி பயின்றதற்கான முன்னுரிமை, இதர முன்னுரிமை (இராணுவம், விதவை ) போன்றவை அடிபடையில் Rank List வெளியிட்ட பிறகே பணியிட வாய்ப்பு குறித்து இறுதியாக அறிய இயலும். Rank List வெளியிட ஓரிரு வாரங்கள் ஆகலாம்.

6. இருப்பினும் தாள் 1 மற்றும் தாள் 2 இல் வெற்றி பெற்ற அனைவருக்குமே பணியிட வாய்ப்பு கிடைத்தால் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்.

Tuesday, October 30, 2012

சட்டசபை கூட்டத் தொடர் முடிந்தபின், தேர்வு முடிவு வெளியாகும்

சென்னை : சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், டி.இ.டி., தேர்வு முடிவு, ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 கடந்த, 14ல் நடந்த, டி.இ.டி., மறுதேர்வில், 4.75 லட்சம் தேர்வர் பங்கேற்றனர். விடைத்தாள் மதிப்பீடு முடிந்து விட்டது. தேர்வு தொடர்பாக, தேர்வர்கள் கொடுத்த, 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மீது, ஆய்வு நடத்தி, உரிய மதிப்பெண் இழப்பீடுகளையும், டி.ஆர்.பி., வழங்கியுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, தேர்வு முடிவு தயாரிக்கும் பணிகள், சில நாட்களாக நடந்து வந்தன. 27ம் தேதியுடன், அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டன. இதனால், 28 அல்லது 29ம் தேதியில், முடிவை வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்தது. ஆனால், எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என, தெரியவில்லை.

இதற்கிடையே, சட்டசபையின், குளிர்கால கூட்டத் தொடர், நவ., 2 வரை நடக்கிறது. இந்நேரத்தில், தேர்வு முடிவை வெளியிடுவது சரியாக இருக்காது என, டி.ஆர்.பி., கருதியது. முந்தைய தேர்வை விட, தேர்ச்சி சதவீதம் அதிகரித்தோ அல்லது குறைந்தோ, எப்படி இருந்தாலும், அது, சட்டசபையில் விமர்சனத்தை ஏற்படுத்தும் எனவும், டி.ஆர்.பி., கருதுகிறது. இதனால், சட்டசபை கூட்டத் தொடர் முடிந்தபின், தேர்வு முடிவு வெளியாகும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

1:30 விகிதாச்சாரப்படிஆசிரியர்கள் நியமனம்: அரசு திட்டம்

சிவகங்கை:அரசு பள்ளிகளில்,1:30 விகிதாச்சாரத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில், அரசு நடு, உயர், மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப, ஆசிரியர்கள் இல்லை. மாநில அளவில், பள்ளிகளில் பல ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளன. குறிப்பாக, மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டப்படி, 1:30 விகிதாச்சாரப்படி, ஆசிரியர்கள் இருக்க வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில், 60 முதல் 90 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் உள்ளனர். இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகின்றது.

குறிப்பாக, 10 மற்றும் பிளஸ் 2 அரசு பொதுதேர்வுகளில், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கீழ்நிலைக்கு சென்று விடுகிறது. இவற்றை தவிர்த்து, மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கும் பொருட்டு, மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டப்படி, தமிழக அரசு 1: 30 விகிதாச்சாரப்படி மாணவர்களை நியமிக்க, திட்டமிட்டுள்ளது. இதற்காக, அரசு பள்ளிகளில், தற்போது பணியாற்றும் முதுகலை பட்டதாரி, இளங்கலை பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கை; 1:30 விகிதாச்சாரப்படி பள்ளிகளில் தேவைப்படும் ஆசிரியர்கள் விபரம்; ஒவ்வொரு பள்ளிகளிலும்,காலியாக உள்ள ஆசிரியர்கள் குறித்த விபரங்களை அனுப்ப, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,""தமிழகத்தில், 1:30 விகிதாச்சாரப்படி, ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, பிரிவு வாரியாக தேவைப்படும் ஆசிரியர்கள் விபரங்களை, அரசு சேகரிக்கிறது. 2013 ஜூன்- முதல்,இந்த விகிதப்படி ஆசிரியர்கள் பணியாற்றுவர்,''என்றார்.

Thursday, October 25, 2012

ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள் குளறுபடிகள்



ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள் குளறுபடிகள்
குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல்
ஆங்கிலத்தில் கேள்வித்தாளைத் தயாரித்து தமிழாக்கம் செய்யும்போது ஏகப்பட்ட குளறுபடிகளை செய்து ஆசிரியர்களை குழப்பிவிட்டது ஆசிரியர் தேர்வுவாரியம்.உதாரணமாக குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் பகுதியில்
1.பின்வருவனவற்றுள் எது புறத்தேற்று முறையின் கீழ் வராது? என்ற வினாவில் Sentence completion test என்பதை வாக்கியம் நிறைவு செய்தல் சோதனை என்று மொழிபெயர்க்காமல் வெறுமனே வாக்கியம் நிறைவு செய்தல் என்று மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது.
10.ஒரு தனிநபரின் மிகப்பொருத்தப்பாட்டு நடத்தையை வெளிக்காட்டும் குணநலன் என்ற வினாவுக்கு நன்கு நிலைபடுத்தப்பட்ட தன்னுணர்வு மனம் என்று விடை கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் தாழ்நிலை மனம்,தன்னுணர்வு மனம் மற்றும் மேனிலை மனம் எல்லாமும் ஒருங்கே பலமுடன் இருக்கும் நிலை என்பதே மிகச்சரியான விடையாகும்.ஆதாரம்:கற்றல்,மனித வளர்ச்சி தொடர்பான உளவியல் புத்தகம். இராம்பதிப்பகம்,சென்னை-93      பேராசிரியர் கி.நாகராஜன் பக்கம்:354
13.வீட்டுப்பாடத்தை வெறுக்கும் குழந்தையினை நேர்மறையாக திருத்த முயல்வது என்ற வினாவுக்கு இருத்தல்-கட்டுப்பாட்டு முறை என்று விடை கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் கருவிசார் ஆக்க நிலையிறுத்த முறை என்பதே சரியான விடையாகும். ஆதாரம்:கற்றல்,மனித வளர்ச்சி தொடர்பான உளவியல் புத்தகம். இராம்பதிப்பகம்,சென்னை-93      பேராசிரியர் கி.நாகராஜன் பக்கம்:201 இல் நாம் விரும்பும் துலங்கலை வலுவூட்டி,நடத்தையாக ஆக்குதல் என்பதே ஸ்கின்னரின் செயல்படு ஆக்கநிலையிறுத்தத்தின் அடிப்படை சாரமாகும் என்று கொடுக்கப்பட்டுள்ளது.
16.மனவெழுச்சி காதார்ஸிஸ் என்பது என்ற வினாவில் Emotional catharsis means என்பதை மனக்குமுறல்களை ஆற்றுப்படுத்துதல் என்று மொழிபெயர்க்காமல் அப்படியே ஆங்கிலத்தில் கொடுத்து ஆசிரியர்களை குழப்பியுள்ளனர்.
23.மனவெழுச்சி நுண்ணறிவுடன் தொடர்புள்ள முக்கிய பெயர் என்ற வினாவுக்கு ஜாக்மேயர்,பீட்டர் ஸலோவே,எஸ்.ஹெயின்,லீப்ரோவேதனி போன்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ள எந்த பெயரையும் கொடுக்காமல் டேனியல் கோல்மென் என்றுபுத்தகத்தில் இல்லாத ஒரு தொடர்புடைய பெயரை கொடுத்திருப்பது எந்த விதத்தில் சரி?
25.கற்றல் வளைகோடு இதனை வெளிக்காட்டுகிறது என்ற வினாவுக்கு   Graph representing the learner’s progression with time  என்ற பதிலை கற்போரின் வளர்நிலையைக் குறிக்கிறது என்று மிகக்குழப்பமாக தமிழ் மொழி பெயர்த்துள்ளனர்.கற்றலின் வளர்ச்சியை ஒரு வரைபடமாக காலத்தைக் கொண்டு விளக்குவது கற்றல் வளைகோடு என்று தமிழ்வழியில் படித்த மாணவர்கள் இந்த கேள்விக்கு எப்படி விடை அளிக்க முடியும்?
30.அறிவுசார் வளர்ச்சிப் படிநிலைகளில் குறியீட்டு சமன்பாடுகளை புரிந்துகொள்ளும் நிலை என்ற கேள்விக்கு
A)Sensori-motor stage                  -புலனியக்க நிலை
B)Concrete-operational stage  -பருப்பொருள் நிலை 
C)Pre-operational stage          -செயலுக்கு முற்பட்ட நிலை
D)Formal-operational stage  -கருத்தியல் நிலை                                 என்று புத்தகத்திலுள்ளவாறு மொழிபெயர்த்திருந்தால் எளிமையாக விடை அளித்திருக்க முடியும்.
தமிழ்
ஒன்று முதல் பத்தாம்வகுப்பு புத்தகங்களை படித்தால் போதும் என்று கூறிய ஆசிரியர் தேர்வுவாரியம் தமிழுக்கான வினாக்களை எந்த புத்தகங்களில் இருந்துதான் கேட்டார்களோ என்று குழம்பும் அளவுக்கு பத்தாம் வகுப்பு புத்தகங்களை தாண்டி மேல்நிலை வகுப்புகளில் அதிக அளவு வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.
58.கோட்டுகிர் குருளை என்றழைக்கப்படுவது என்ற வினாவிற்கு மேல்நிலை முதலாம் ஆண்டு தமிழ் புத்தகத்தில் பக்கம் 14 இல் ஊன்பொதியவிழாக் கோட்டுகிர்க் குருளை அதாவது நகங்கள் தசைப்பகுதியிலிருந்து வெளிவராத புலியின் குருளை என்று பொருள் உள்ளது.ஆனால் எட்டாம் வகுப்பு தமிழ் 63ஆம் பக்கத்தில் இளமைப்பெயர்களில் புலிக்கு புலிப்பறழ், சிங்கத்துக்கு சிங்கக்குருளை என்று உள்ளது.எனவே சரியான விடை சிங்கம் மற்றும் புலி இரண்டும் ஆகும்.
ஆங்கிலம்
ஆங்கிலத்தில்74வது வினாவான Identify the correct characteristic என்ற கேள்விக்கு Validity என்று கொடுக்கப்பட்டுள்ளது. Reliability , Validity இரண்டுமே சரியான விடைகள்.
சமூக அறிவியல்
111.சுழற்சி இயக்கங்களிலேயே மிக எளிமையானது என்ற வினாவுக்கு மேல்நிலை முதலாம் ஆண்டு புவியியல் புத்தகத்தில் பக்க எண்:80இல் சுழற்சி இயக்கங்களிலேயே மிக எளிமையானது பாஸ்பரஸ் சுழற்சி என்று  கொடுக்கப்பட்டுள்ளது.
ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பக்கம்-139 இல்
நீர் சுழற்சி என்பது நீர் நிலத்திலிருந்து வளிமண்டலத்தை அடைந்து மீண்டும் நிலத்தை அடையும் செயலாகும் என்று கொடுக்கப்பட்டுள்ளது.
112.வளிமண்டலத்தில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை 5 என்று உள்ளது.ஆனால் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் பக்கம் 105இல் வளிமண்டலத்தினை அதன் பண்புகளின் அடிப்படையில் நான்கு அடுக்குகளாக பிரிக்கப்படுகிறது.1.அடியடுக்கு(Troposphere) 2.படையடுக்கு(Stratosphere) 3.அயனியடுக்கு(Ionosphere) 4.வெளியடுக்கு(Exosphere) மேலும்,5.சேணிடை அடுக்கு(Tropopause) என்ற மெல்லிய அடுக்கானது அடியடுக்கு மற்றும் படையடுக்கு இவைகளுக்கிடையே அமைந்துள்ளது. படையடுக்கினை தொடர்ந்து மீண்டும் ஒரு மெல்லிய அடுக்கு காணப்படுகிறது.இது 6.மீவளி இடையடுக்கு(Stratopause)என அழைக்கப்படுகிறது. ஆகமொத்தம் 6அடுக்குகள் என்பதே மிகச்சரியான விடையாகும்.ஆனால் மேல்நிலை முதலாம் ஆண்டு பக்க எண்:64 இல் 5 என்று உள்ளது.
128.தொழிலகங்களை இயக்கும் உயிர்நாடி எனப்படுவது என்ற வினாவுக்கு எரிசக்தி என விடை கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் பொருளியலில் மனிதனால் உருவாக்கப்படாத அனைத்து பொருட்களும் நிலம் என்றழைக்கப்படுகிறது.நிலம் தானாக எதையும் உற்பத்தி செய்ய முடியாது.மனிதன் நிலத்தில் உழைத்து பண்டங்களையும்,பணிகளையும் உற்பத்தி செய்கிறான். “Labour is the active and initial force and labour is therefore the employer of capital” ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பக்கம்:181
தொழிற்சாலைக்கு மூலப்பொருட்கள்,பணியாளர்கள்,எரிபொருள்,மூலதனம், போக்குவரத்து,சந்தை அனைத்துமே உயிர்நாடிதான்.அப்படியிருக்க எரிசக்தி மட்டுமே தொழிலகங்களை இயக்கும் உயிர்நாடி என்று எப்படிக்கூற முடியும்? எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பக்கம்:130
ஆனால் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பக்க எண்:75 இல் எரிசக்தி என்று உள்ளது
113.ஒரு சூழலில் உள்ள நீரோட்டங்கள் என்ற வினாவுக்கு நான்கு என்று விடை கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் பக்க எண்:141இல் பேராழிநீரோட்டங்கள் இரண்டு வகைப்படும்.அவைகள் வெப்ப மற்றும் குளிர் நீரோட்டங்கள் ஆகும் என்று உள்ளது.
மேல்நிலை முதலாம் ஆண்டு புவியியல் புத்தகத்தில் பக்க எண்:50இல்
மூன்று பெருங்கடல்களுக்கும் கண்டங்கள் எல்லைகளாக அமைந்திருக்கின்றன.இவை நீரோட்டங்களின் பாதைகளில் தடைகளாக அமைவது மட்டுமன்றி அந்நீரோட்டங்கள் ஏறக்குறைய வட்ட வடிவில் சுழலவும் காரணமாக அமைகின்றன.இத்தகைய சுழல்தோற்றங்களை பெருங்கடல் சுழல்கள்(OCEAN GYRES) என அழைக்கிறோம்.மேலும் ஒரு சுழலில் நான்கு நீரோட்டங்கள் அமைந்துள்ளன.என்று உள்ளது.
பெருங்கடல் சுழலில் உள்ள நீரோட்டங்கள் என்று கேட்பதற்கு பதிலாக ஒரு சூழலில் உள்ள நீரோட்டங்கள் என்று தவறாக வினா கேட்கப்பட்டுள்ளது.


தாள் 2 இல் சமுக அறிவியல் வினாவில் ANSWER KEY C 

வினா என் 98. தாமரை எதை உருவகப்படுதிகிறது? இவ்வினாவிற்கு சரியான விடை ஒற்றுமை (VII std TAM MEDIUM CIVICS LESSON 1 text book page no 151) ஆனால் trb விடைகளில் நிறம் என தவறாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 

வினா எண் 146 சுழற்சி இயக்கங்களில் எளிமையானது? சரியான விடை "நீர் சுழற்சி" ஆனால் trb விடைகளில் 'பாஸ்பரஸ் சுழற்சி " என தவறாக வெளியிடப்பட்டுள்ளது.

வினா எண் 127. பணம் எதையெல்லாம் செய்ய வல்லதோ அதுவே பணம் வரையறுத்தவர்? சரியான விடை "வாக்கர்" (VIII STD TEXT BOOK ECONOMICS LESSON 1) ஆனால் trb விடைகளில் " இர்விங் பிஷேர்" என தவறாக வெளியிடப்பட்டுள்ளது.

வினா எண் 20 ஒரு தனி நபரின் மிக பொருத்தபாட்டு நடத்தையை வெளிக்காட்டும் குணநலன்?சரியான விடை " தாழ்நிலை மனம் தன உணர்வு மனம் மற்றும் மேனிலை மனம் எல்லாமும் ஒருங்கே வளமுடன் இருக்கும் நிலை" ஆனால் trb விடைகளில் " நன்கு நிலை படுத்தப்பட்ட தன உணர்வு மனம் " என தவறாக வெளியிடப்பட்டுள்ளது.

Tuesday, October 16, 2012

ஜூனில் அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு

அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூனில் நடத்தப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன், டிசம்பர் ஆகிய மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தாலும், ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வு என்று 4 மாதங்களில் 2 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
எனவே, இந்த ஆண்டு இறுதியிலோ, அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ மற்றொரு தேர்வை நடத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இப்போதுள்ள அரசாணையின்படி, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முடியும். ஆண்டுக்கு இருமுறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது தொடர்பாக இதுவரை அரசாணை பெறப்படவில்லை. விரைவில் இந்த அரசாணையைப் பெறுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் 2,448 பேருக்கு ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதில் 202 பேர் உரிய தகுதிகளுடன் இல்லை என்று தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் அனைவரது மதிப்பெண்ணையும் மீண்டும் சரிபார்க்க வேண்டியுள்ளதால், ஆசிரியர் தகுதித் தேர்வில் ஏற்கெனவே தேர்ச்சி பெற்ற 2,246 பேருக்கும் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி, சென்னை
First Published : 15 October 2012 02:09 AM IST

Thursday, October 11, 2012

பள்ளிகள் பற்றிய புள்ளிவிபரங்கள் சேகரிப்பு

தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள, உள் கட்டமைப்பு வசதிகள், மாணவ, மாணவியர் எண்ணிக்கை, ஆசிரியர் எண்ணிக்கை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

தமிழகத்தில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, மொத்தம், 55 ஆயிரத்து 667 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 5.49 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; 1.35 கோடி மாணவ, மாணவியர், படித்து வருகின்றனர். அனைத்துப் பள்ளிகள், அவற்றின் உள் கட்டமைப்பு வசதிகள், மாணவ, மாணவியர் எண்ணிக்கை, ஆசிரியர் விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை திரட்டி, அவை, பள்ளிக் கல்வி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்த விவரங்களின் அடிப்படையில், தேவையான வசதிகளை ஏற்படுத்தவும், புதிய திட்டங்களை தீட்டவும், பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
 இந்த கணக்கெடுப்பு பணியை, ஆண்டுதோறும் நடத்த, திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து வகை பள்ளிகளுக்கும், 32 பக்கங்கள் அடங்கிய படிவங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்ககத்தின் சார்பிலும், இதர வகுப்புகளுக்கு, மத்திய இடைநிலை கல்வித்திட்டம் சார்பிலும், விண்ணப்ப படிவங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. விண்ணப்ப படிவத்தில், தவறான தகவல்கள் இடம் பெற்றிருந்தால், அதற்கு, சம்பந்தபட்ட தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் எனவும், அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும், இனசுழற்சி என்ற அடிப்படையில், பல்வேறு இன மாணவர்கள் பங்கேற்கும் நடைமுறை விவரம், ஒப்பந்த ஆசிரியர் எண்ணிக்கை, அவர்களைப் பற்றிய விவரங்கள், பள்ளியின் உள் கட்டமைப்பு வசதிகள் உட்பட, பல்வேறு தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பு பணியை, வரும் நவம்பர் இறுதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், அரசு பள்ளிகளில் உள்ள உண்மையான நிலவரம் தெரிந்து விடும்.

Wednesday, October 10, 2012

டி.இ.டி. தேர்வு: மாறுகிறது ரேங்க் பட்டியல்

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு என்றழைக்கப்படும் டி.இ.டி. தேர்வில், தேர்ச்சி பெற்ற, 2,448 பேரின், ரேங்க் பட்டியல், புதிய விதிமுறைகளின் படி, மாற்றி அமைக்கப்படுகிறது.
ஏற்கனவே நடந்த, டி.இ.டி., தேர்வில், 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர். "இவர்களது பணி நியமனம், பணி நியமனத்திற்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும்&' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி, புதிய வழிகாட்டி நெறிமுறைகளின்படி, தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, புதிய, ரேங்க் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இதனால், தேர்வு பெற்றவரின், ரேங்க் இடம் மாறலாம்; ஆனால், வேறு எந்த பாதிப்பும் ஏற்படாது என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.புதிய தேர்வுப் பட்டியல், ஓரிரு நாளில் வெளியிடப்படும்.
புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தாலும், இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் மட்டும், உச்ச நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வரும் வரை, மாநில பதிவுமூப்பு அடிப்படையிலேயே (டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்) நடக்கும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tuesday, October 9, 2012

ஆசிரியர்களை நியமிக்க புதிய வழிமுறை

பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான புதிய வழிமுறையை பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
 ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு நேர்முகத் தேர்வு அல்லது மீண்டும் போட்டித் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய முறையாக "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது.
  ஆசிரியர் தகுதி மறுதேர்வு வரும் 14-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் ஏற்கெனவே பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 100 மதிப்பெண் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும்.

 பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் பட்டயத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும்.
 மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு இவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் (உச்ச நீதிமன்ற வழக்கு முடியும்வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்).

 பட்டதாரி ஆசிரியர்களுக்கு...ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 10 மதிப்பெண்ணும், இளநிலைப் பட்டம், பி.எட். பட்டங்களில் பெற்ற மதிப்பெண்ணுக்கு தலா 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
   
 
வெயிட்டேஜ் எப்படி?
 இடைநிலை ஆசிரியர்களுக்கான
 "வெயிட்டேஜ்' மதிப்பெண் (100):

 பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (15):
 90 சதவீதத்துக்கு மேல் ..................- 15 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை.............-12
 70 முதல் 80 சதவீதம் வரை.............- 9
 60 முதல் 70 சதவீதம் வரை.............- 6
 50 முதல் 60 சதவீதம் வரை.............- 3

 ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (25)
 70 சதவீதத்துக்கு மேல்..................- 25 மதிப்பெண்
 50 முதல் 70 சதவீதம் வரை............- 20

 ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
 90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 54
 70 முதல் 80 சதவீதம் வரை............- 48
 60 முதல் 70 சதவீதம் வரை............- 42
 
 
 பட்டதாரி ஆசிரியர்களுக்கான
 "வெயிட்டேஜ்' மதிப்பெண் (100):
 
 பிளஸ் 2 தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் (10)
 90 சதவீதத்துக்கு மேல்..................- 10 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 8
 70 முதல் 80 சதவீதம் வரை............- 6
 60 முதல் 70 சதவீதம் வரை............- 4
 50 முதல் 60 சதவீதம் வரை............- 2
 
இளநிலைப் பட்டப் படிப்பு (15)
 70 சதவீதத்துக்கும் மேல்................- 15
 50 முதல் 70 சதவீதம் வரை............- 12
 50 சதவீதத்துக்கும் கீழே................- 10

 பி.எட். படிப்பு (15)
 70 சதவீதத்துக்கும் மேல்................- 15
 50 முதல் 70 சதவீதம் வரை............- 12

 ஆசிரியர் தகுதித் தேர்வு (60)
 90 சதவீதத்துக்கும் மேல்................- 60 மதிப்பெண்
 80 முதல் 90 சதவீதம் வரை............- 54
 70 முதல் 80 சதவீதம் வரை............- 48
 60 முதல் 70 சதவீதம் வரை............- 4