Saturday, February 11, 2012

டி.என்.பி.எஸ்.சி., முறைகேடு: பணம் கொடுத்த ஊழியர்களுக்கு"கல்தா'

சிவகங்கை:டி.என்.பி.எஸ்.சி.,முறைகேடு புகாரால், 1995க்கு பின் முறைகேடாக பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு"கல்தா' கொடுக்க ஆணையம் முடிவு செய்து உள்ளது. டி.என்.பி.எஸ்.சி.,யில் குரூப் 2, 4 தேர்வுகள் மூலம் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களிடம் பணத்தை கொடுத்து, ஏராளமானவர்கள் வேலை பெற்றதாக புகார் எழுந்தது. டி.என்.பி.எஸ்.சி.,ஆணைய தலைவர் செல்லமுத்து, உறுப்பினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். அங்கு கிடைத்த ஆவணங்களின் படி, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதி, வேலை பெற்ற ஊழியர்களில் முறைகேடாக பணம் கொடுத்து பெற்றவர்களின் பட்டியல் சிக்கியுள்ளது.
இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி., ஆணைய தலைவர் செல்லமுத்து ராஜினாமா செய்தார். புதிய தலைவராக நடராஜ் பொறுப்பேற்றார்.
இவர், கடந்த காலங்களில் டி.என்.பி.எஸ்.சி.,யில் நடந்த முறைகேடு குறித்து விசாரித்து வருகிறார். அந்தந்த மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் முக்கிய ஆவணங்களை சேகரித்து வருகிறார்.
"கல்தா': இந்த விசாரணையில், 95ம் ஆண்டு முதலே டி.என்.பி.எஸ்.சி.,யில் பணத்தை கொடுத்து முறைகேடாக பலர் பணியில் சேர்ந்த விவரம் தெரிய வந்துள்ளது. அவர்கள் குறித்த பட்டியலையும் டி.என்.பி.எஸ்.சி.,சேகரித்து வருகிறது. இதனால், தமிழக அளவில், அரசு அலுவலகங்களில் பணம் கொடுத்து முறைகேடாக பணியில் சேர்ந்த ஊழியர்களிடையே "கிலி' ஏற்பட்டுள்ளது. ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையில், 95ம் ஆண்டு முதல் இந்த முறைகேடு நடந்திருப்பதாக தெரிகிறது. அதன்படி, அக்கால கட்டத்தில் இருந்து முறைகேடாக பணம் கொடுத்து பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு "கல்தா' கொடுக்க ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளது. முறைகேடாக பணியில் சேர்ந்தவர்கள் நீக்கம் செய்யப்படலாம், என்றார்.

No comments:

Post a Comment