Wednesday, October 3, 2012

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ரத்து

சென்னை: இடஒதுக்கீட்டை தவறுதலாக பின்பற்றியதோடு, 50 வினாக்களுக்கான பதில்கள், முற்றிலும் தவறுதலாக இருந்ததால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் தேர்வை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ள, தேர்வு பெற்றவர் பட்டியலும், இதன் மூலம் ரத்து செய்யப்படுகிறது. புதிய மதிப்பெண் பட்டியலோடு, தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை, 3 வாரத்திற்குள் வெளியிட வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், 2,395 முதுகலை ஆசிரியர் பட்டதாரி பணியிடங்களை நிரப்ப, பிப்ரவரி, 28ம் தேதி, அறிவிப்பு வெளியிட்டது. இத்தேர்வில், முதன்மை பாடம், கல்வி முறை மற்றும் பொது அறிவு ஆகியவற்றில் இருந்து, 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
இதில், கொள்குறி வினாக்களுக்கு, கொடுக்கப்பட்ட பதில், முற்றிலும் தவறாக இடம் பெற்றது. தேர்வாணையம் வெளியிட்ட, தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில், தேர்விலேயே முதல் மதிப்பெண் பெற்றவர்களை, பொதுப்பிரிவில் சேர்க்காமல், அவர்களின் சாதி அடிப்படையிலான பிரிவில் சேர்த்துள்ளனர். இதனால், இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாதது தெரியவந்தது.
இதையடுத்து, தேர்வு எழுதியவர்களில் சிலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி நாகமுத்து அளித்த தீர்ப்பு:
பொதுப் பிரிவுக்கான தேர்வு முடிவுகளை, வாரியம் முறையாக பின்பற்றவில்லை. கேள்வித்தாளில் இடம் பெற்ற, வினாக்களுக்கான பதில், முற்றிலும் தவறானதாக இருந்ததால், மாணவர்கள் மதிப்பெண் பெறுவதும் தடைபட்டு உள்ளது.
எனவே, தேர்வாணையத்தின் தேர்வு பட்டியல் ரத்து செய்யப்படுகிறது. மூன்று வாரத்திற்குள், புதிய மதிப்பெண் பட்டியலோடு, தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த விவரங்களை, தேர்வாணையம் வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
என்ன சொல்கிறது டி.ஆர்.பி: தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான, "கீ ஆன்சர்&' தவறு என்று, உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் குறித்து, மறுமதிப்பீடு செய்து, பிரச்னைக்குரிய விடைகளை இறுதி செய்து, இணையதளத்தில் வெளியிடப்படும்.
ஏற்கனவே ஒரு பணியிடத்திற்கு ஒருவர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர். இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தப்படும். இதற்கு அழைக்கப்படுபவரின் பட்டியலும் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

1 comment:

  1. பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால்தான் வேலை வாய்ப்பு என்றால் இந்த அதிமுக அரசு இன்னொரு ஆணையையும் பிரப்பித்திருக்கவேண்டும் bed படிப்பு என்பது இனி கல்லூரிகளில் கிடையாது என்றும் இப்படி தகுதி தேர்வு எழுதியே வாய்ப்பு வழங்கப்படும் என்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு என்பது கிடையாது என்றும் ஆணை பிறப்பித்து இருக்கவேண்டும் தேர்வு எழுதினால் மட்டுமே வேலைவாய்ப்பு என்றால் எதற்கு வேலைவாய்ப்பு பதிவு மையம் தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் பட்ட படிப்புக்கான இடத்தையே நீக்கிவிடசொல்லுங்கள் தமிழகத்தில் உள்ள பத்திரிக்கைகள் இப்படி அரசை கேட்க்குமா

    ReplyDelete