Monday, October 8, 2012

ஆசிரியர் தகுதி தேர்வு: ஹால் டிக்கெட் வினியோகம்

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்விற்கு, புதிதாக விண்ணப்பம் செய்த தேர்வர்களுக்கு, இன்று முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. டி.ஆர்.பி., இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பு, மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. ஜூலை, 12ம் தேதி நடந்த தேர்வில், 6 .76 லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருந்ததால், தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், அக்டோபர், 3ம் தேதி, மறுபடியும் தேர்வு எழுதலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இந்நிலையில், இத்தேர்வில், ஜூலைக்கு பின், பி.எட்., முடித்தவர்களையும் அனுமதிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், "தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களும், புதிதாக பி.எட்., படித்தவர்களும், 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர், 3ம் தேதி நடக்க இருந்த தகுதித் தேர்வு, அக்டோபர், 14ம் தேதிக்கு மாற்றப்படுகிறது&' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தேர்வு எழுதுபவர்களுக்கு விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன.
புதிதாக தேர்வெழுத, 17 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர். அவர்களுக்கான ஹால் டிக்கெட், இன்று முதல் வழங்கப்படுகிறது. ஹால் டிக்கெட்டை, டி.ஆர்.பி., இணையதளத்தில் (www.trb.tn.nic.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட், எக்காரணம் கொண்டும், வீட்டு முகவரிக்கு அனுப்பப்படாது.
தேர்வர்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் இருந்து மட்டுமே, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பழைய விண்ணப்பதாரர்களுக்கு, ஹால் டிக்கெட் வீட்டுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment