Thursday, August 16, 2012

17 அல்லது 18-ந் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வை 6.5 லட்சம் பேர் எழுதினார்கள். இடைநிலை ஆசிரியர்கள் 2.5 லட்சம் பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 4 லட்சம் பேரும் இத்தேர்வை எழுதினார்கள்.

23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இத்தேர்வு நடத்தப்பட்டது. தாள்-1, தாள்-2 ஆகிய இந்த இரண்டு தேர்வுகளையும் எழுத போதுமான காலஅவகாசம் கொடுக்கவில்லை. 150 கேள்விகளுக்கு 90 நிமிடங்களில் பதில் அளிக்க முடியவில்லை. கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கி இருந்தால் மட்டுமே முறையாக பதில் அளிக்க முடியும் என்று தேர்வர்கள் புகார் கூறினார்கள்.

தமிழகம் முழுவதும் பரவலாக தேர்வர்கள் குற்றச்சாட்டை தெரிவித்தனர். போதுமான நேரம் ஒதுக்காமல் வினாத்தாள் தயாரிக்கப்பட்டதே இந்த குளறுபடிக்கு காரணம் என்று கூறப்பட்டது.

இதற்கிடையில் வினாக்களுக்கான விடைகளை இணையதளத்தில் வெளியிட்டனர். தேர்வர்கள் தங்களது விடைத்தாள் நகலுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விடைகளை சரிபார்த்து ஏதாவது தவறுகள் இருந்தால் முறையிடலாம் என்று அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் அனைத்து வினாத்தாள்களும் ஸ்கேன் செய்யப்பட்டு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டன. மதிப்பீடு செய்ததில் மிக குறைந்த அளவில் அதாவது 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று இருப்பதாக ஒரு தகவல் வெளியானது.

6.5 லட்சம் பேர் தேர்வு எழுதியதில் வெறும் 2 ஆயிரம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்று இருப்பதை அறிந்த அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு மறுத்துவிட்டனர்.

வருகிற 17 அல்லது 18-ந் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. அப்போது எத்தனை பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்று கூறினர். அதனால் தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment