Tuesday, August 30, 2011

முதல்வர் ஜெ., அறிவித்த சமச்சீர் கல்வி தமிழகத்தில் கல்வி புரட்சி ஏற்பட வழிவகுக்கும்

தென்காசி : "முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள சமச்சீர் கல்வி தமிழகத்தில் கல்வி புரட்சி ஏற்பட வழி வகுக்கும்' என தென்காசி எம்.எல்.ஏ., கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ""தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் தரமான கல்வியை பெறும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள புதிய சிறப்பான திட்டங்களை அறிவித்துள்ளார். பொதுவான பாடத்திட்டம் மட்டுமே சமச்சீர் கல்வி ஆகி விடாது. சமச்சீர் கல்விக்கு ஆதாரமானவை பள்ளிகளின் தரம், ஆசிரியர்-மாணவர் விகிதத்தின் அடிப்படையில் தேவையான எண்ணிக்கையில் கூடுதல் ஆசிரியர் நியமனம், பாட புத்தகங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல் கல்வி இணை செயல்பாடுகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கும் விதமாக உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி ஆகியவற்றிற்காக பகுதி நேர ஆசிரியர்கள், கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், சுகாதாரமான குடிநீர் வசதி போன்ற அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு போன்றவையே என்பதனை உணர்ந்து முதல்வர் பல்வேறு திட்டங்களையும், செயல்பாடுகளையும் அறிவித்துள்ளார். இது தமிழகத்தில் கல்வி புரட்சி ஏற்பட வழி வகுக்கும்.
இதன் அடிப்படையில் 65 துவக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 710 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்த சுமார் 420 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 9 ஆயிரத்து 735 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3 ஆயிரத்து 565 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களை ஏற்படுத்த 315 கோடி ரூபாயும், 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்த 99 கோடி ரூபாயும், உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஆயிரத்து 83 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
மாநில அரசின் நிதியில் இருந்து 99 கோடி ரூபாய் செலவில் 3 ஆயிரத்து 187 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட இருப்பது மகிழ்ச்சிக்குரியது. அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் வகையில் ஒரே விதமான புத்தக பைகள், கணித உபகரண பெட்டிகள் வழங்க இருப்பது நல்ல சிந்தனை. துப்புரவு மற்றும் இதர பணிகளுக்கான ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 5 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்பட இருப்பது கல்வி வளர்ச்சி பணிகளுக்கு வலுவூட்டுவதாக அமையும்.
மாணவர்கள் புத்தக சுமையை குறைக்கும் விதமாக வரும் கல்வி ஆண்டு முதல் முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்பட இருப்பது மாணவ, மாணவிகளுக்கும் பெற்றோருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், மன நிறைவையும் ஏற்படுத்தும். நவீன தொழில் நுட்பத்தின் பலன்கள் மாணவ சமுதாயத்திற்கும், ஆசிரியர்களுக்கும் சென்றடைய பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் வழங்க இருப்பதும், ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தல் முறைகளை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் உருவாக்க இருப்பதும் முதல்வரின் தொலை நோக்கு சிந்தனையை வெளிப்படுத்துகிறது.
முதல்வர் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஆராய்ந்து அனைவரும் வியந்து பாராட்டும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். இதுதான் உண்மையான சமச்சீர் கல்வி. இதுதான் தமிழகத்திற்கு இன்றைய தேவை என்று நடைமுறைப்படுத்தியிருக்கும் முதல்வருக்கு ச.ம.க.சார்பிலும், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பிலும் பாராட்டி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என எம்.எல்.ஏ., அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment