Friday, March 9, 2012

ஜுன் 3-ந்தேதி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம்


சென்னை, மார்ச்.7-

ஜுன் மாதம் 3-ந் தேதி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் வருகிற 22-ந் தேதி முதல் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வு

மத்திய அரசின் உத்தரவின்படி அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

அதன்படி தமிழ்நாட்டில் 23-8-2010-ந் தேதி அன்றோ அதற்கு பின்னரோ ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதிதேர்வை எழுதவேண்டும். இந்த தேர்வை 5 ஆண்டுகளுக்குள் எழுதி தேர்ச்சி பெறவேண்டும்.

சுயநிதி பள்ளிகளில் பி.எட். படிக்காமல் பணிபுரியும் ஆசிரியர்கள் 5 வருடங்களுக்குள் பி.எட்.படிக்கவேண்டும். பின்னர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டும்.

1-வது முதல் 8-வது வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவேண்டும். பிளஸ்-2 படித்துவிட்டு 2 வருட ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியராக பணிபுரிபவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் முதல் தாள் பரீட்சையை எழுதவேண்டும். பி.எட். படித்தவர்கள் 2-வது தாள் பரீட்சையை எழுதவேண்டும். சில தனியார் பள்ளிகளில் 1-முதல் 8 வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர் சில வகுப்புகளை எடுக்கலாம். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் முதல் தாளையும் எழுதவேண்டும்., 2-வது தாளையும் எழுதவேண்டும்.

விண்ணப்பம்

ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விண்ணப்பம் மார்ச் 22-ந்தேதி முதல் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் கிடைக்கும்.

விண்ணப்பத்தின் விலை ரூ.50.

விண்ணப்பம் கொடுக்கும் போது அதில் ஒரு வங்கிச்செல்லான் இருக்கும். அதை யாரும் தொலைக்காமல் பத்திரமாக வைத்து அந்த செல்லானை பூர்த்தி செய்து `ஸ்டேட் பாங்க்'கில் ரூ.500 செலுத்தவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்கவேண்டும். அவ்வாறு ஒப்படைக்க ஏப்ரல் 4-ந்தேதி கடைசி நாள்.

பாடத்திட்டம்

தேர்வு ஜுன் மாதம் 3-ந் தேதி நடைபெறுகிறது. தேர்வில் ஆப்ஜெக்ட் முறையில் கேள்விகள் இருக்கும். அதாவது ஒரு கேள்விக்கு 4 பதில் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஒன்று மட்டும் சரியானதாக இருக்கும். 3 பதில்கள் தவறாக இருக்கும்.

ஆசிரியர் தேர்வு எழுத பாடத்திட்டம் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

தேர்வு தேதி இப்போதைக்கு தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. சில நாட்கள் முந்தவும் சில நாட்கள் பிந்தவும் வாய்ப்பு உள்ளது. தேர்வை 7 லட்சம் பேர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 8 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment