Tuesday, March 13, 2012

பணி நேரம் தெரியாமல் பகுதி நேர ஆசிரியர்கள் குழப்பம்

மதுரை: பள்ளிகளில் பணி நாட்கள் மற்றும் நேரம் தெளிவாக குறிப்பிடப்படாததால், புதிதாக பொறுப்பேற்ற பகுதி நேர ஆசிரியர்கள், குழப்பத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, வீட்டு முகவரிக்கு நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. அதில் பணிபுரிய வேண்டிய பள்ளியை குறிப்பிட்டு, 7 நாட்களுக்குள் சேரும்படி தெரிவிக்கப்பட்டது. பகுதி நேர பணி என்பதால், இருப்பிடத்துக்கு அருகிலுள்ள பள்ளிகளில் பணி ஒதுக்கப்படும் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றமுற்றனர். சிலருக்கு, வேறு மாவட்டங்களில் பணி ஒதுக்கப்பட்டது. பணி ஒதுக்கீடு குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. பணி உத்தரவுடன் சென்ற ஆசிரியர்களை, தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கத் தயங்கினர். முதன்மை கல்வி அலுவலகம் அறிவுறுத்திய பின், ஆசிரியர்கள் பணியில் சேர அனுமதிக்கப்பட்டனர். புதிய ஆசிரியர்கள், வாரத்துக்கு மூன்று நாட்களுக்கு, தலா 3 மணி நேரம் பணிபுரிய வேண்டும். எந்த மூன்று நாள்கள், எந்த நேரங்களில் பணிபுரிய வேண்டும் என குறிப்பிடப்படவில்லை. காலை 9 முதல் 12 மணி வரை பணிபுரியும் கணினி ஆசிரியர்களுக்கு, மின் வெட்டு அமலில் இருப்பதால் பாதிப்பு ஏற்படுகிறது. தையல் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட பள்ளிகளில் தையல் மிஷின்கள் இல்லை. ஓவியம், உடற்கல்வி ஆசிரியர் பணிபுரியும் பட்சத்தில், அதே பள்ளியில் அதே பாட பிரிவுக்கு ஆசிரியர் நியமிக்கப்பட்டது குழப்பத்தை ஏற்படுத்தியது. மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், ""பகுதிநேர ஆசிரியர்களுக்கு மூன்று மணி நேர பணி குறித்து உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முழுநேரமும் பணிபுரிய வேண்டும் என, சில தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்துவதாக புகார் வந்தது. தையல் மிஷின் இல்லாதது, ஒரு பாடத்துக்கு இரு ஆசிரியர் பிரச்னை குறித்து, தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்தி தெளிவுபடுத்தப்படும்'' என்றார்.

No comments:

Post a Comment