Tuesday, May 8, 2012

எந்த குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பது ?

மதுரை: தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் மார்ச்சில் நியமிக்கப்பட்ட 4 ஆயிரம் சிறப்பாசிரியர்களுக்கு கோடை விடுமுறையான மே மாத சம்பளம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

எஸ்.எஸ்.ஏ., மூலம் மாதம் ரூ. 5ஆயிரம் சம்பளத்தில் பகுதி நேர ஆசிரியர்களாக உடற்கல்வி, தையல், ஓவியம் மற்றும் கணினி படிப்பு முடித்த 4 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் வாரத்தில் 3 நாட்கள் வீதம் மாதம் 12 நாட்கள் வேலை செய்தால் கிராம கல்வி குழுக்கள் மூலம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். கோடை விடுமுறையான மே மாதம் அவர்களுக்கு சம்பளம் வழங்கலாமா? என பல மாவட்டங்களில் இருந்தும் மாநில எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் அலுவலகத்தில் தலைமை ஆசிரியர்கள் தொலைபேசியில் கேட்டனர்.

குழப்பமான உத்தரவு: இதற்கு திட்ட இயக்குனரிடமிருந்து தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று ஓர் உத்தரவு வந்தது.

 அதில், "தேர்வு நேரத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்படலாம். அதற்கு பதிலாக அந்நாட்களை ஈடுசெய்யும் வகையில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வு விடுமுறையில் அவர்கள் பள்ளிக்கு வந்து குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். பள்ளிக்கு வராத மே மாதத்திற்கு சம்பளம் கிடையாது' என தெரிவிக்கப்பட்டது.

 இதன்படி, விடுமுறை நாட்களில் எந்த குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பது என ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதுகுறித்து சிறப்பாசிரியர்கள் கூறியதாவது:  

எங்களுக்கு குடும்பம் உண்டு. பணியில் சேர்ந்தது முதல் சம்பளம் பெறவில்லை. சம்பந்தப்பட்ட பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் "லிஸ்ட்' வரவில்லை என கூறுகின்றனர். தற்போது மே சம்பளமும் இல்லை. இப்படியிருந்தால் குடும்பத்தை எப்படி நடத்துவது? மே மாதத்திலும் பணிகள் ஒதுக்கி, சம்பளம் வழங்க கருணை அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.



1 comment:

  1. sir add our computer science website.
    in ur website
    www.tncsteacher.co.nr
    and
    www.tncsbed.blogspot.in

    ReplyDelete