Saturday, May 26, 2012

தகுதி தேர்வு விடைத்தாள், மார்க் இணையதளத்தில் வெளியிடப்படும்

சென்னை, மே.19-

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வு உள்பட அனைத்து தேர்வு விடைத்தாள்களும், மார்க்கும் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தேர்வில் எந்தவித ஒளிவும் மறைவும் இல்லை என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி தெரிவித்தார்.

சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்வு தேதியில் மாற்றம் இல்லை

2 ஆயிரத்து 895 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு மே மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேதியில் எந்தவித மாற்றமும் இல்லை. அதுபோல ஆசிரியர் தகுதி தேர்வு ஜுன் மாதம் 3-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு நடைபெறும் தேதியிலும் மாற்றம் இல்லை.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு ஒரு லட்சத்து 52 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் தேர்வு எழுத 740 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் 18 ஆயிரத்து 342 பட்டதாரி ஆசிரியர்களும், 5 ஆயிரத்து 450 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். அது எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்கள் என்ற விவரம் விரைவில் அறிவிக்கப்படும். அதுபோல முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கும், ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்படும். வீடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். தபால் மூலம் அனுப்பப்படும்போது அது கிடைக்காமல் போனால் கவலைப்படத்தேவையில்லை. இணையதளத்தில் உள்ள உங்கள் பெயர் உள்ள பக்கத்தை காப்பி எடுத்து அதைக்கொண்டு தேர்வு எழுதலாம்.

விடைத்தாள் நகல், மார்க் வெளியிடப்படும்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஒவ்வொரு தேர்விலும் தேர்வர்களுக்கு விடைத்தாள் கொடுக்கும்போது அவர்கள் எழுதுவது கார்பன் பேப்பரில் பதியும்படி கொடுக்கப்பட உள்ளது. அசல் விடைத்தாளை தேர்வு அறையில் உள்ள சூப்பர்வைசரிடம் கொடுத்துவிட்டு பின்னர் கார்பன் பேப்பரில் பதிந்த விடைத்தாளை தேர்வு முடிந்ததும் வீட்டுக்கு கொண்டு செல்லலாம். (இதை அருகில் இருந்த ஆசிரியர் வாரிய உறுப்பினர் அறிவொளி செய்து காண்பித்தார்)

இருப்பினும் தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் முடிவு வெளியிடும்போது அனைத்து மாணவர்களின் விடைத்தாள் நகல் மற்றும் அவர்கள் பெற்ற மார்க், சரியான விடை (கீ) ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.

ஒளிவு மறைவு இன்றி தேர்வு நடத்தப்படும். யாரும் எந்த வதந்தியையும் நம்ப வேண்டாம். யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

ஜுன் மாத இறுதிக்குள் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு, ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு ஆகியவை வெளியிடப்படும்.

ஆட்கள் பற்றாக்குறை பற்றி கவலை இல்லை

என்னையும் சேர்த்து ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 14 பேர் உள்ளோம். ஆட்கள் பற்றாக்குறை இருந்தபோதிலும் விரைவாக ஆசிரியர் தேர்வு வாரிய பணிகளை செவ்வனே கவனிப்போம். சரியான கம்ப்ïட்டர் கொண்டு சரியான முறையில் விடைத்தாள்கள் மதிப்பீடுசெய்து உரிய நேரத்தில் முடிவு வெளியிடப்படும்.

No comments:

Post a Comment