Friday, May 4, 2012

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவு தள்ளிப்போகுமா?

சிவகங்கை: தமிழ் விடைத்தாள் திருத்தும் பணி தேக்கத்தால், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவு அறிவிப்பு தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சிவகங்கை புனித ஜஸ்டின் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.27ல் துவங்கியது. தமிழ் பாடத்திற்கான பணியில் சிவகங்கை கல்வி மாவட்டத்தை சேர்ந்த 78 உதவி தேர்வாளர்களும், 11 முதன்மை தேர்வாளர்களும், 11 கூர்ந்தாய்வாளர்களும் என 100 தமிழாசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான மாவட்டங்களில் இம்முறை தமிழ் முதல், 2ம் தாள்கள் அதிகமாக வந்திருப்பதால், திருத்தி முடிக்கும் பணி சற்று தாமதம் ஆகும் நிலை ஏற்படும் என ஆசிரியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

தமிழாசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ""இம்முறை சிவகங்கை மையத்திற்கு 33 ஆயிரம் தமிழ் பாட விடைத்தாள்கள் வந்துள்ளன. சமச்சீர் கல்வி அமலுக்கு வந்ததால் மெட்ரிக்.,தனித்தேர்வர்கள் விடைத்தாள்களும் ஒரே மையத்தில் திருத்துவதாலும், ஆசிரியர்கள் பற்றாக்குறையாலும் தேக்கம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""தகுதியுள்ள அனைத்து தமிழாசிரியர்களையும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தி உள்ளோம். ஐவர் மட்டும் மருத்துவ விடுப்பில் உள்ளனர்.விதிமுறைப்படி,பணிக்கு சேர்ந்து 2 அல்லது 3 மாதமே ஆன மெட்ரிக்.,சுயநிதி பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களை பணியில் ஈடுபடுத்த முடியாது. தமிழ் பாடம் மட்டும் மே15க்குள் திருத்தி முடிக்கும் பணி முடியும். மற்ற பாடங்கள் 10ந்தேதிக்குள் முடிந்து விடும்.முடிவு அறிவிப்பு தேதி தள்ளிப்போகாது,'' என்றார்.

No comments:

Post a Comment