Friday, May 4, 2012

"டிப்ளமோ' ஆசிரியருக்கு திருமண நிதியுதவி இல்லை

ஈரோடு: ""மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தில், ஆசிரியர் பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு திருமண நிதி உதவி கிடையாது,'' என்று மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு தெரிவித்தார்.

ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை சார்பில், சமூக நலத்திட்டங்கள் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் குறித்து செயலாக்க அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு சமூக நலத்திட்டங்கள் குறித்து பேசியதாவது:
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு (தேர்வு எழுதி இருந்தால் போதும்.
தேர்ச்சி கட்டாயமில்லை) படித்துள்ள பெண்களுக்கு நான்கு கிராம் தங்கத்துடன் 25 ஆயிரம், பட்டம், பட்டயப்படிப்பு படித்து இருந்தால், நான்கு கிராம் தங்கத்துடன் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பட்டயப்படிப்பு என்பது தொழிற்கல்வி சார்ந்த படிப்புக்கு மட்டுமே. ஆசிரியர் பட்டயப்படிப்பு படித்திருந்தால், அவர்களுக்கு இந்த உதவி வழங்கப்பட மாட்டாது. 

குடும்ப ஆண்டு வருமானம் 24 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். திருமணத்துக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும். பயனாளி பெண்ணின் பெற்றோர்.
விதவை மகள், ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி திட்டத்தில் 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 24 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். திருமணத்துக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
கலப்பு திருமண நிதி உதவி திட்டத்தில், எஸ்.சி., எஸ்.டி.,யை சேர்ந்த பெண் அல்லது ஆண், பிற்பட்ட அல்லது முற்பட்ட வகுப்பை சேர்ந்தவரை திருமணம் செய்திருக்க வேண்டும்.

உச்ச வருமான வரம்பு இல்லை. திருமண நாளில் இருந்து இரண்டு ஆண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஜாதிச்சான்று, திருமண பதிவுச்சான்று தேவை. இருப்பிடச்சான்று தேவையில்லை.
டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண திட்டத்தில், மறுமணம் செய்யும் போது மணமகளுக்கோ, மணமகனுக்கோ அதிகபட்ச வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 20 வயது இருக்க வேண்டும். உச்ச வருமான வரம்பு இல்லை. இரண்டாவது மணமகனுக்கு உயிருடன் வேறு மனைவி இருக்கக்கூடாது. திருமணம் முடிந்த ஆறு மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அனைத்து திருமண நிதியுதவி திட்டத்திலும் பயனாளிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தால் நான்கு கிராம் தங்கத்துடன் 25 ஆயிரம், பட்டம், பட்டயப்படிப்பு படித்திருந்தால் நான்கு கிராம் தங்கத்துடன் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment