Saturday, May 19, 2012

டி.இ.டி., தேர்வு தேதியில் மாற்றம் கிடையாது

சென்னை : ""டி.இ.டி., தேர்வு, திட்டமிட்டபடி ஜூன் 3ம் தேதி நடைபெறும். இதில், எவ்வித மாற்றமும் கிடையாது,'' என, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி கூறினார்.

அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மாற்றமில்லை : ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,), ஜூன் 3ம் தேதி நடைபெறும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இத்தேர்வு, வேறு தேதிக்கு மாற்றப்படுமா என்பது குறித்து, தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தேர்வை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளும், திட்டமிட்டபடி நடந்து வருகின்றன. எனவே, ஜூன் 3ம் தேதி டி.இ.டி., தேர்வு நடைபெறும்; இதில், எவ்வித மாற்றமும் கிடையாது.

ஆறு லட்சத்து 56 ஆயிரத்து 54 பேர், தேர்வை எழுத உள்ளனர். இவர்களுக்கு, "ஹால் டிக்கெட்' தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில், அனைத்து தேர்வர்களுக்கும் இவை அனுப்பி வைக்கப்படும்; இணையதளத்திலும் வெளியிடப்படும். வீட்டு முகவரிக்கு, "ஹால் டிக்கெட்' கிடைக்கப் பெறாதவர்கள், இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதை வைத்தே, தேர்விலும் பங்கேற்கலாம்.

முதுகலை தேர்வு : வரும் 27ம் தேதி, முதுகலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு நடக்கிறது. இதே நாளில், ரயில்வே தேர்வும் நடப்பதாகக் கூறப்பட்டது. இது பற்றி விசாரித்ததில், ஐ.டி.ஐ., - பி.எஸ்சி., பாலிடெக்னிக் போன்ற கல்வித் தகுதி உடையவர்களுக்கான தேர்வு தான் அன்று நடக்கிறது. அத்தேர்வுக்கும், முதுகலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. எனவே, முதுகலை ஆசிரியர் தேர்வு, 740 மையங்களில் திட்டமிட்டபடி நடைபெறும்.
 இத்தேர்வு குறித்தும், தேர்வு செய்யப்படும் முறை குறித்தும், தவறான தகவல்களை யாராவது பரப்பினால், அதை தேர்வர்கள் நம்பக்கூடாது. தேர்வு, நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறும். தகுதி அடிப்படையில் தான், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். எனவே, இந்த விஷயத்தில் தேர்வர்கள் உஷாராக இருக்க வேண்டும். டி.இ.டி., தேர்வு மூலம், 18 ஆயிரத்து 343 பட்டதாரி ஆசிரியர்களும், 5,451 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்படுவர்.

விடைகள் வெளியீடு : தேர்வர்களுக்கு, விடைத்தாள் நகல் வழங்கும் திட்டம் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. விடைத்தாளுடன் சேர்த்து மற்றொரு விடைத்தாள் வெற்று நகல் வழங்கப்படுகிறது. விடைகளை குறிப்பிடும் போது, அது நகலிலும் பதிவாகும். தேர்வு முடிந்து, முடிவுகள் வெளியிட்டதும், இனி விடைகளை இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
 இவ்வாறு சுர்ஜித் சவுத்ரி கூறினார்.

No comments:

Post a Comment