Thursday, November 24, 2011

பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயம்

சென்னை, நவ. 23: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

 பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பின்பு, மாநில பதிவு மூப்பின் அடிப்படையிலோ, மற்றொரு தேர்வின் மூலமாகவோ நியமிக்கப்படுவார்கள் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அரசாணை விவரம்:
 ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுபவர்களை மட்டுமே தொடக்கக் கல்வி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
 தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, உரிய தகுதிகள் இல்லாத ஆசிரியர்கள் சட்டம் அமலுக்கு வந்த 5 ஆண்டுகளுக்குள் அந்தத் தகுதியைப் பெற வேண்டும்.
 தனியார் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் இந்தத் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
 தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் (1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் ஆசிரியர் பட்டயப் படிப்பை முடித்திருக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர்கள் (6 முதல் 8 வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் பி.எட். படித்திருக்க வேண்டும். அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்விலும் வெற்றி பெற வேண்டும்.
 இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க தகுதித் தேர்வு நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 உச்ச நீதிமன்ற வழக்கு: இடைநிலை ஆசிரியர் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு முடியும் வரை, மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
 இந்த இடைக்கால உத்தரவையும், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் வழிகாட்டி விதிமுறைகளையும் கவனமாக பரிசீலித்த பிறகு ஆசிரியர் தேர்வில் கீழ்க்கண்ட கொள்கை மாறுதல்களை அரசு பிறப்பிக்கிறது.
 1. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு முடியும் வரை, வேலைவாய்ப்பு அலுவலக மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனம் நடைபெறும்.
 2. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை இடைநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிப்பதற்காக பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிமுறைகளின் படி தகுதித் தேர்வும், அதன்பிறகு சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறும்.
 3. ஆசிரியர் நியமனத்துக்கான தகுதித் தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் வழங்கப்படுகிறது என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment