Wednesday, January 4, 2012

395 பகுதி நேர ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் 395 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இதற்கான நேர்முக தேர்வு பாளை.,யில் நேற்று முதல் ஆரம்பமானது.அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் 130 பகுதி நேர உடற்கல்வி ஆசிரிர்கள், 127 கலைக் கல்வி ஆசிரியர்கள், 138 தொழிற் கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.இப்பணிக்கான விண்ணப்பங்கள் வட்டார வள மைய அலுவலகங்களில் கடந்த 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நடந்தது.
இதில் தகுதியான சுமார் 2,980 பேருக்கு சான்றிதழ்கள் சரி பார்க்க அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் அழைப்பு கடிதங்கள் அனுப்பபட்டன. இதில் தையல் பிரிவுக்கு 1,241 பேருக்கும், உடற்கல்வி பிரிவுக்கு 660 பேருக்கும், 1,079 மீதமுள்ளவர்களுக்கும் அழைப்பு கடிதங்கள் அனுப்பட்டது. இவர்களுக்கு சான்றிதழ் சரி பார்ப்பு மற்றும் இன்டர்வியூ பாளை கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளியில் நேற்று ஆரம்பமானது.

முதன்மை கல்வி அலுவலர் பகவதி தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் ஜெயபாண்டி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள், அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள், முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகள், அந்தந்த துறை நிபுணர்கள் இன்டர்வியூவை நடத்தினர். வரும் 12ம் தேதி வரை சான்றிதழ் சரி பார்ப்பு பணிகள் நடக்கிறது.சான்றிதழ்களை சரி பார்க்க 10 குழுக்களும், நேர்முகத் தேர்வுக்கு 3 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் 300 பேருக்கு சான்றிதழ் சரி பார்ப்பு மற்றும் இன்டர்வியூ பணிகள் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் 4 நாட்கள் தையல் ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரி பார்ப்பு நடத்தப்படுகிறது. முதல் நாளில் மொத்தம் 300 பேரில் 284 பேர் பங்கேற்றனர். வரும் 7 மற்றும் 9ம் தேதிகளில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், மீதமுள்ளவர்களுக்கு வரும் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரையிலும் சான்றிதழ் சரி பார்ப்பு நடக்கிறது.
இதுசம்பந்தமாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் சீனியாரிட்டி மற்றும் இன சுழற்சி பட்டியல் பெறப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வில் கூடுதல் கல்வித் தகுதி மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்த பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. திட்ட காலம் முடியும் வரை மட்டுமே இந்த ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டியிருக்கும். எந்தவித முன் அறிவிப்பும் இன்றி எந்த நேரத்திலும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment