Tuesday, January 31, 2012

பழைய அறிவிப்பு :





அ.தி.மு.க., ஆட்சி வந்ததில் இருந்து, புதிய ஆசிரியர் நியமன அறிவிப்புகள், திரும்பத் திரும்ப வந்து கொண்டிருக்கின்றன. நேற்றைய கவர்னர் உரையிலும், ஆசிரியர் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், நியமனப் பணிகள் தான், இதுவரை துவங்கவில்லை.

பழைய அறிவிப்பு : ஆட்சி அமைந்த ஆறே மாதங்களில், 55 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை அறிவித்து, ஆசிரியர் படிப்பிற்கு படித்தவர்களை, அ.தி.மு.க., அரசு, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி வருகிறது. மாதத்திற்கு இரண்டு முறையாவது, ஆசிரியர் நியமன அறிவிப்புகள் வந்து விடுகின்றன. சட்டசபையில், நேற்றைய கவர்னர் உரையிலும், "நடப்பு கல்வியாண்டில், 33 ஆயிரத்து, 681 ஆசிரியர் பணியிடங்களும், 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 5,000 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன' என, ஏற்கனவே வெளியான ஆசிரியர் நியமன அறிவிப்பு, திரும்பவும் வெளியாகியுள்ளது.

நியமனப் பணிகள் இல்லை : இன்னும் ஐந்து மாதங்களில், நடப்பு கல்வியாண்டு முடியப் போகிறது. அறிவிப்புகள் மட்டும் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருக்கிறதே தவிர, பணியிடங்களை நிரப்புவதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
முந்தைய ஆட்சி அறிவித்த பணியிடங்கள் தான், இதுவரை நியமனம் செய்யப்பட்டு வருகின்றன.பகுதி நேர ஆசிரியர் நியமன விவகாரத்தில், ஆளுங்கட்சியினரின் தலையீடுகள் காரணமாக, 16 ஆயிரத்து, 549 ஆசிரியர்களை எப்படி தேர்வு செய்யப் போகிறோம் எனத் தெரியாமல், அதிகாரிகள் முழித்துக் கொண்டிருக்கின்றனர். 2,682 முதுகலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது.
இடைநிலை ஆசிரியரை பொறுத்தவரை, தகுதித் தேர்வை நடத்திய பிறகே, நியமனம் செய்ய வேண்டும் என, வழக்கு தொடர்ந்துள்ளதால், அப்படியே உள்ளது. 14 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதில், முதலில் ஆசிரியர் தகுதித் தேர்வா அல்லது போட்டித் தேர்வா என்பது, இன்னும் முடிவு செய்யாமல் இழுபறியாகவே உள்ளது.

இவராவது தீர்ப்பாரா? : சி.வி.சண்முகம் அமைச்சராக இருந்தபோதும், ஆசிரியர் நியமனக் கொள்கையில் முடிவு எடுக்கப்படவில்லை. எட்டு நாள் அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, துறையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன், பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மூன்றாவது அமைச்சராக வந்துள்ள சிவபதியாவது, ஆசிரியர் நியமனத்தில் உள்ள பிரச்னையை தீர்ப்பாரா அல்லது ஆறப் போடுவாரா எனத் தெரியவில்லை.
புதிய அறிவிப்புகள் வெளியிடாதது ஏன்? : கவர்னர் உரையில், பள்ளிக் கல்வித் துறைக்கு எந்தவிதமான புதிய அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. நடப்பு ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் வெளியிடப்பட்ட பல அறிவிப்புகள், இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் இருக்கின்றன. மாவட்ட நூலகங்களில், 1,353 நூலகர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டது; இதில், 260 பணியிடங்கள், பதவி உயர்வு மூலம், சமீபத்தில் நிரப்பப்பட்டது. ஆனால், 1,093 ஊர்ப்புற நூலகர்கள், (புதிய பணியிடம்) இன்னும் நியமிக்கப்படவில்லை.
* அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டத்தின் கீழ், அரசு உயர்நிலைப்பள்ளிகளில், 344 இளநிலை உதவியாளர்கள், 544 ஆய்வக உதவியாளர்கள் நியமிக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டது. இதற்கு, அரசாணை வெளியானதுடன் சரி; மேற்கொண்டு எந்தப் பணிகளும் நடக்கவில்லை. இதேபோல், பல திட்டங்கள் நிலுவையில் இருப்பதால் தான், புதிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை எனக் கூறப்படுகிறது.

அடுத்த வாரத்திற்குள் நடவடிக்கை?பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சபீதா கூறும்போது, ""ஏற்கனவே அரசு அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த, நடவடிக்கை எடுத்து வருகிறோம். பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை பொறுத்தவரை, முதலில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது குறித்து, அமைச்சருடன் ஆலோசித்து, அடுத்த வாரத்திற்குள் அறிவிப்பு வெளியிடப்படும்,'' 

No comments:

Post a Comment