Monday, January 23, 2012

1,267 teachers



சென்னை, ஜன. 22: தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்காக இந்தக் கல்வி ஆண்டிலேயே 1,267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக தோற்றுவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக ரூ.36 கோடியே 17 லட்சத்தை ஒதுக்கியும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 இதுதொடர்பாக, தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:
 2009-10 ஆம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 831 நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ஒரு பட்டதாரி ஆசிரியர் வீதம் 831 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 2010-11 ஆம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 218 நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா 2 பட்டதாரி ஆசிரியர் வீதம் 436 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
 இந்த 1,267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் இந்தக் கல்வி ஆண்டிலேயே (2011-12) தோற்றுவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி கற்க ஏற்றவகையில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
 அரசு உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்குத் தேவையான சாய்வு மேஜை, இருக்கை, மேஜை, நாற்காலி ஆகிய வசதிகளை ஏற்படுத்த ரூ.36 கோடியே 17 லட்சத்தை ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 25 ஆயிரம் ஆசிரியர்கள்: தமிழக அரசின் இந்த அறிவிப்பையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இந்த ஆண்டு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 25,284 ஆக அதிகரித்துள்ளது. இதில் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் 16,028 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
 ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இந்த ஆண்டுக்கான ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளன. ஆசிரியர் தகுதித் தேர்வு, போட்டித் தேர்வுகள் ஆகியவை நடத்தப்பட்டு, ஜூன் மாதத்துக்குள் ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.
 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோர் எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறும் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
 உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை, இடைநிலை ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர். 16 ஆயிரத்துக்கும் அதிகமான பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கும் பணி மாவட்ட அளவில் இப்போது நடைபெற்று வருகிறது.
 

No comments:

Post a Comment