Friday, January 6, 2012

தகுதி தேர்வா - நேரடி தேர்வா?

நடப்பு கல்வியாண்டில், 24 ஆயிரத்து, 17 ஆசிரியர்களை, போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்ய, பள்ளிக் கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. இதில், ஆசிரியர் தகுதித் தேர்வை முதலில் நடத்துவதா அல்லது பிரதான போட்டித் தேர்வை நடத்துவதா என்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசித்து வருகிறது. இந்த விவகாரத்தில், ஓரிரு நாளில் முடிவெடுத்து, தேர்வு வாரியத்திற்கு, தமிழக அரசு அறிவிக்க உள்ளது.

திணறும் டி.ஆர்.பி.,:நடப்பாண்டுக்கான ஒதுக்கீட்டின் கீழ், 24 ஆயிரத்து, 17 ஆசிரியர்களை, போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்ய அனுமதி அளித்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. எனினும், ஆசிரியர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில், இதுவரை எவ்வித முடிவையும், ஆசிரியர் தேர்வு வாரியம் எடுக்கவில்லை.எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களை, தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என, கட்டாயக் கல்விச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

எட்டாம் வகுப்பு வரை, இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் என, இரு வகையான ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.இடைநிலை ஆசிரியர் நியமன விவகாரம் குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. தீர்ப்பு வரும் வரை, மாநில பதிவு மூப்பு அடிப்படையிலேயே பணி நியமனங்கள் இருக்கும் என, ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துவிட்டது.ஆனால், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் நியமனம், ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் போட்டித் தேர்வு அடிப்படையிலேயே இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

எது முதலில்?இவர்களுக்கு தகுதித் தேர்வை நடத்தி, அதன்பின் பிரதான போட்டித் தேர்வை நடத்தி முடிவை வெளியிட வேண்டுமெனில், அடுத்த கல்வியாண்டில் பாதி கரைந்துவிடும். எனவே, என்ன செய்வது எனத் தெரியாமல், ஆசிரியர் தேர்வு வாரியம் முழித்து வருகிறது.இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை செயலர் ஸ்ரீதர், "முதலில், பிரதான போட்டித் தேர்வை நடத்தி, ஆசிரியர்களை தேர்வு செய்து விடுவோம்; அதன் பின், பொறுமையாக ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவோம்' என, ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, எழுத்துப்பூர்வமாக எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

அதிகாரிகளுடன் ஆலோசனை: இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது குறித்து, கல்வித் துறை அதிகாரிகளுடன், ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று ஆலோசனை நடத்தியது. பிப்ரவரியில், தகுதித் தேர்வு அறிவிப்பை வெளியிட்டு, மே மாதம் தேர்வை நடத்துவது குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக, அரசின் கருத்தைக் கேட்க, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவெடுத்துள்ளது. இதற்கு, ஓரிரு நாளில் முடிவெடுத்து, தேர்வு வாரியத்திற்கு, தமிழக அரசு அறிவிக்க உள்ளது. இதன் பின், புதிய ஆசிரியர் நியமனப் பணிகள் துவங்கும்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=380359

No comments:

Post a Comment