Wednesday, February 1, 2012

ஆசிரியையாக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட இளம்பெண், கேரளாவில் பிச்சை எடுத்து வருகிறார்.


ஆலப்புழா: எதிர்காலத்தில் ஆசிரியையாக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட இளம்பெண், கேரளாவில் சுற்றுலா பயணிகளிடம் பிச்சை எடுத்து வருகிறார்.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியைச் சேர்ந்தவர் நரசிம்மலு. கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சனம்மா. உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். இத்தம்பதியருக்கு மூன்று மகள்கள். இவர்களில் இருவருக்கு திருமணமாகி விட்டது. மூன்றாவது மகள் சிராவணா, 17. பிளஸ் 2 தேர்வில் 1000த்திற்கு 752 மதிப்பெண் பெற்றுள்ள இவர், ஆசிரியையாக விரும்பினார். ஆனால், கட்டடத் தொழிலாளியான அவரது தந்தை வேலைக்குச் செல்லாமல், நோயாளி மனைவியை கவனித்து வருகிறார். சிராவணாவை படிக்க வைக்க அவரது பெற்றோரால் முடியவில்லை. இதையடுத்து அவர் அதே பகுதியைச் சேர்ந்த கங்கலுப்பா என்ற வாலிபருடன், கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு பத்து நாட்களுக்கு முன் வந்தார். அங்கு கடற்கரையோரம் ஒரு குடிசையில் தங்கி, அங்கு வரும் சுற்றுலா பயணிகள் உட்பட பலரிடம் பிச்சை எடுத்து வருகிறார். அவர் ஆலப்புழா அரசு மருத்துவமனை முன் பிச்சை எடுக்கும்போது, சமூக ஆர்வலர் ஒருவர் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து, அவரை பிடித்துச் சென்று மகளிர் இல்லத்தில் கொண்டு சேர்த்தனர்.
"ஒன்பது நாட்கள் பிச்சை எடுத்ததில் 2,834 ரூபாய் கிடைத்தது. இந்த பணத்தை சேகரித்து மேற்கொண்டு படிக்க முயற்சிப்பேன்"
ஆங்கிலம் மற்றும் தெலுங்கில் சரளமாக பேசத் தெரிந்த சிராவணா கூறியதாவது: பிளஸ் 2 தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்றாலும், முதலில் நர்சிங் படிக்க விரும்பினேன். ஆனால், இடது தோளில் உள்ள பிரச்னை காரணமாக, அக்கல்வியை தவிர்த்து விட்டு, ஆசிரியை கல்வி கற்க விரும்பினேன். ஆனால், ஆசிரியை பணி என்பது எளிதானது அல்ல என்பதை உணர்ந்தேன். எனது சொந்த ஊரில் இருந்து கங்கலுப்பா என்பவருடன் இங்கு வந்தேன். அவரும் இங்கு பிச்சை எடுத்து வருகிறார். கடற்கரையோரம் ஆந்திராவைச் சேர்ந்த சிலர் தங்கி உள்ளனர். அவர்களுடன் நானும் தங்கியிருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் என் தந்தையுடன் இங்கு வந்துள்ளேன். அப்போது அவர் இங்கு கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்தார். ஒன்பது நாட்கள் பிச்சை எடுத்ததில் 2,834 ரூபாய் கிடைத்தது. இந்த பணத்தை சேகரித்து மேற்கொண்டு படிக்க முயற்சிப்பேன்' என்றார்.

No comments:

Post a Comment