Saturday, February 4, 2012

கண்டிப்பாக தமிழ் படிக்க வேண்டும்: முதல்வர் ஜெ.


சென்னை: ""தமிழகத்தில் படிக்கும் அனைத்துப் பள்ளி மாணவர்களும், தமிழ்மொழிப் பாடத்தை கண்டிப்பாக படிக்க வேண்டும். கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்தில் எவ்வித மாற்றங்களும் கொண்டுவரப்பட மாட்டாது,'' என, முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக கூறினார்.
சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:

கோபிநாத்-காங்கிரஸ்: ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லைகளை ஒட்டிய தமிழகப் பகுதிகளில், தெலுங்கு, கன்னடம் மற்றும் உருதை தாய் மொழியாகக்கொண்ட மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும் என்ற சட்டத்தின் காரணமாக, சிறுபான்மை மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள், படிக்க முடியாமல் திணறுகின்றனர். இப்படி கூறுவதால், நாங்கள் தமிழ் மொழிக்கு விரோதியானவர்கள் கிடையாது. தமிழ் மொழியை கற்பதில் அனைவரும் ஆர்வமாக இருக்கிறோம். எனினும், பள்ளி மாணவர்களுக்கு உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு, விருப்பப் பாடமாக உள்ள கன்னடம், தெலுங்கு மற்றும் உருதுமொழி பாடங்களை, முக்கிய மொழிப்பாடமாக (தமிழ் பாடத்தைப்போல்) மாற்ற வேண்டும்.

அமைச்சர் சி.வி.சண்முகம்: 2006ல், அப்போது இருந்த தி.மு.க., அரசு, கட்டாயம் தமிழ் படிப்பதற்கான சட்டத்தை கொண்டு வந்தது. அந்த சட்டத்தின்படி, தமிழ்ப் பாடத்தை, படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும் படிக்க வேண்டும். அதன்படி, நடப்பு கல்வியாண்டில், 6ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களும் தமிழ் பாடத்தை கற்க வேண்டும். தற்போது வரை, சிறுபான்மை மொழியை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அவர்கள், பத்தாம் வகுப்பிற்கு வரும்போது தான், தமிழை ஒரு பாடமாக பொதுத் தேர்வில் எழுத வேண்டியிருக்கும். விருப்பப் பாடமாக, அந்தந்த தாய்மொழிகளில் மாணவர்கள் படிக்கலாம். ஆனால், தேர்வுக்கு கட்டாயம் கிடையாது. ஆந்திராவில், தெலுங்கு மொழிப் பாடத்தை படிக்காமல், பள்ளிப் படிப்பை முடிக்க முடியாது. அதேபோல், கர்நாடகாவில், கன்னட மொழிப்பாடம், அனைவருக்கும் கட்டாயமாக உள்ளது.

கோபிநாத்: எல்லையில் உள்ள அரசு பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள் கிடையாது. தமிழ்பாட ஆசிரியர் பணியிடங்களும் காலியாகவே இருக்கின்றன. இப்படியிருந்தால், எப்படி மாணவர்கள் தமிழை படிக்க முடியும்? எனவே, முதல் மொழிப் பாடமாக, சிறுபான்மை மொழிப்பாடங்களை கொண்டுவர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா: தமிழகத்தில் உள்ள மாணவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடைய தாய்மொழி எதுவாக இருந்தாலும், அவர்கள் கட்டாயமாக தமிழை படிக்க வேண்டும்.அதில், எவ்வித மாற்றமும் இல்லை. ஆந்திராவிலும், கர்நாடகாவிலும், அந்தந்த மாநில மொழிகளை கண்டிப்பாக படிக்க வேண்டும் என உத்தரவு இருக்கிறது. எனவே, தமிழகத்தில் படிக்கும் மாணவர்கள், கண்டிப்பாக தமிழ்ப் பாடத்தை படித்தாக வேண்டும் என்ற சட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. தலைமை ஆசிரியர்கள் இல்லை; ஆசிரியர்கள் இல்லை என்ற குறைகளை சரிசெய்ய, இந்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு விவாதம் நடந்தது.

இன்று அறிவிப்பு? ஆந்திரா, கர்நாடகா எல்லையை ஒட்டியுள்ள தமிழக அரசுப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள் இல்லை என்றும், தமிழ்ப்பாட ஆசிரியர்கள் இல்லை என்றும், காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத் கூறினார். "இந்த குறையை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று, முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார். சிறிது நேரத்தில், முதல்வர், பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதியை அழைத்துப் பேசினார். கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசி, தேவையான ஆசிரியர் பணியிடங்கள் விவரங்களைப் பெறவும், அங்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும், முதல்வர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. எனவே, எல்லையோர அரசுப் பள்ளிகளில், போதிய ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பான அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா இன்று, தனது பதிலுரையின்போது வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:

Post a Comment