Wednesday, February 8, 2012

பள்ளி தேர்வில் துள்ளி விளையாடிய அரசியல் கிண்டல்

கோவை:""தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னை கடலிலே தூக்கி போட்டாலும், கட்டு மரமாகத் தான் நான் மிதப்பேன்; அதில் நீங்கள் ஏறி பயணம் செய்யலாம்; கவிழ்ந்து விட மாட்டேன்...'' இது தான் கலைஞர் தொலைக்காட்சியில், இரவு 7.00 மணிக்கு நீங்கள் கேட்கும் வசனம்.

"நீங்கள் என்னை கடலிலே தூக்கி எறிந்தாலும், நீந்தி கரைக்கு வந்து, தொடர்ந்து உங்களை ஏமாற்றுவேன்...!' இது தான் அந்த கேள்வித்தாளில் காணப்படும் "லேட்டஸ்ட் டயலாக்!'கருணாநிதியை அப்பட்டமாகக் கிண்டலடிக்கும் இந்த புது வசனம், "நமது எம்.ஜி.ஆர்' நாளிதழிலோ, எம்.ஜி.ஆர்., மன்ற அறிவிப்பு பலகையிலோ வந்த கேலிச் சித்திரமில்லை; தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றில், 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு தரப்பட்ட ஆங்கிலம் முதல் தாளில் தரப்பட்ட வினாத்தாளில் இருந்த ஒரு வாக்கியம்.அவர் தமிழர்களிடம் கூறுகிறார் என ஆரம்பித்து, "இதை மறைமுக உரையாக (இன்டைரக்ட் ஸ்பீச்) மாற்றி எழுது' என, மேலே கண்ட "டயலாக்' தரப்பட்டுள்ளது.

இதே வினாத்தாளில், "செயல்பாட்டு வினை'யாக (பாசிவ் வாய்ஸ்) மாற்றி எழுதுமாறு சில வாக்கியங்கள் தரப்பட்டுள்ளன; அதில், "அரசியல்வாதிகள் மக்கள் பணத்தை ஏமாற்றி சம்பாதிக்கின்றனர்; அவர்களை திகார் சிறைக்கு கடவுள் அனுப்புகிறார்' என்ற ஒரு வாக்கியம், பல அரசியல்கட்சியினரையும் பொதுவாக கிண்டல் அடிக்கிறது.

மற்றொரு வாக்கியம், "நீங்கள் மூன்று பெண்களை திருமணம் செய்யாதிருந்தால், அவர்களால் மூன்று அமைச்சர்களை (கேபினட் மினிஸ்டர்) தேர்வு செய்திருக்க முடியாது' என, மறைமுகமாக ஓர் அரசியல் தலைவரை பரிகசிக்கிறது.

இதே பகுதியில், "முதல்வர் தன் தேர்தல் பிரசாரத்தின் போது, பல வாக்குறுதிகளை அளித்திருந்தார்; அவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்' என்ற வாக்கியமும் இடம் பெற்றிருக்கிறது; அந்த வாக்கியத்திலும், பெண்பாலை குறிக்கும் வகையில், "ஷீ, ஹெர்' என்ற ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பது, ஆளும்கட்சிக்காரர் ஒருவரே இதை தயாரித்திருப்பதை உறுதி செய்கிறது.தி.மு.க.,வையும், அதன் தலைவரையும் அப்பட்டமாகக் கிண்டலடிக்கும் இந்த கேள்வித்தாள், மருதமலை ரோட்டிலுள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் அரையாண்டுத் தேர்வின் போது தரப்பட்டுள்ளது. தி.மு.க.,வினர் சிலருக்கு இது தெரிந்தும், அவர்கள் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அர்த்தம் புரியவில்லையா அல்லது அர்த்தம் புரிந்து ரசித்தார்களா என்றும் தெரியவில்லை.

கோவை மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் கோபிதாசிடம் கேட்ட போது, ""அரையாண்டு தேர்வுக்கு அரசு கொடுத்த வினாத்தாளை, 75 சதவீத பள்ளிகள் வாங்கியுள்ளன; மற்றவர்கள், வெளியில் வாங்கினர்; நீங்கள் சொல்லும் பள்ளி நிர்வாகம், திருநெல்வேலியிலுள்ள ஒரு பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திடம் அந்த வினாத்தாளை வாங்கியுள்ளது; பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment