Friday, February 24, 2012

பி.ஏ. ஆங்கிலம் (சி.ஏ) மாணவர்கள் ஆட்சியரிடம் மனு

நாமக்கல், பிப். 20: ஆங்கிலம் கணினி செயலாக்கம் படிப்பை ஆங்கில பட்டப்படிப்புக்கு இணையாக கருத வேண்டும் என வலியுறுத்தி தனியார் கல்லூரி மாணவர்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.நாமக்கல் மாவட்டம், வெப்படை கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ கந்தன் கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் (சி.ஏ.) பயிலும் சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆட்சியர் ஜெ.குமரகுருபரனைச் சந்தித்து மனு அளித்தனர்.
மனு விவரம்
பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் இந்த கல்லூரியில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் பி.ஏ. ஆங்கிலம் (சி.ஏ) பட்டப் படிப்பு, ஆங்கிலம் பட்டப்படிப்புக்கு இணையானது என விளம்பரப்படுத்தப்பட்டதால் இதில் நாங்கள் சேர்ந்தோம்.எங்கள் கல்லூரியில் இந்தப் படிப்பில் கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற சுமார் 117 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.
இவர்களில் 5 பேர் 2010-ம் ஆண்டு நடைபெற்ற டி.ஆர்.பி. தேர்வில் வெற்றி பெற்றனர். இவர்கள் பெரியார் பல்கலைக்கழகம் வழங்கிய பி.ஏ. ஆங்கிலம் (சி.ஏ.) பட்டப்படிப்பு சான்றிதழை, சான்றிதழ் சரிபார்ப்பின் போது காட்டிய போது ஆங்கிலம் பட்டப்படிப்பு இணையானது இல்லை என அதை டி.ஆர்.பி. நிர்வாகம் நிராகரித்து விட்டது.
எங்கள் கல்லூரியில் இப்போது 129 பேர் இந்தப் படிப்பை பயின்று வருகிறோம். மேலும், பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் சுமார் 1,500 பேர் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் சுமார் 10 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருக்கின்றனர்.இந்நிலையில், இந்த படிப்பு ஆங்கிலம் பட்டப்படிப்புக்கு இணையானது இல்லை என டி.ஆர்.பி. நிர்வாகத்தால் கூறப்பட்டுள்ளது எங்களது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.எனவே, இந்த விஷயத்தை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது

No comments:

Post a Comment