Thursday, April 19, 2012

அதிகரிக்கும் தகுதி தேர்வு பயிற்சி மையம்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கென பயற்சி மையங்கள் புற்றீசல் போல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதில் பெரும்பாலான மையங்கள், அரசு பள்ளி ஆசிரியர்களால் துவங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டாயக்கல்விச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நியமிக்கப்படும் ஆசிரியர்கள் தகுதித்தேர்வு அடிப்படையில் மட்டுமே நியமிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி நடப்பாண்டில், முதல் தகுதித்தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது.

12 லட்சம் பேர்: இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் பெறப்பட்டது. தமிழகம் முழுவதும், 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களுக்கான மாதிரி வினா-விடை, பாடத்திட்டம் ஆகியவையும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் முதல்முறை நடக்கும் தேர்வு என்பதால், அனைத்து விண்ணப்பதாரர்களிடையேயும் ஒரு வித பயமும், எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. மேலும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், இத்தகுதித்தேர்வு அடிப்படையிலேயே பூர்த்தி செய்யப்படும் என, கல்வி அமைச்சர் சிவபதி அறிவித்துள்ளார். இதனால், தேர்வுக்கு தயாராவதில் அனைத்து தரப்பினரும் அதிக ஆர்வத்துடன் உள்ளனர்.

கட்டணம்: இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, புற்றீசல் போல ஏராளமான பயிற்சி மையங்கள் உருவாகிவருகின்றன. இதில் இரண்டு மாத பயிற்சிக்கு, 6,000 ரூபாய் முதல், பத்து ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பலரும் போட்டி போட்டுக்கொண்டு, பயிற்சி மையங்களில் சேர்வதால், தினந்தோறும் புதிது புதிதாக தற்காலிக பயிற்சி மையங்கள் தோன்றி வருகின்றன. உரிய பயிற்சியற்ற, பணம் வசூலிக்கும் நோக்கில் துவங்கப்படும் போலி பயிற்சி மையங்களால் ஏராளமானோர் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
 இவற்றில், பெரும்பாலான பயிற்சி மையங்கள், அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களால் துவக்கப்பட்டுள்ளது. அரசு பணியில் இருப்பவர்கள் மற்ற பணிகளில் ஈடுபடக்கூடாது என்ற விதிமுறைக்கு மாறாக, பயிற்சி மையங்களை துவக்கி நடத்துவதோடு, அதற்கான விளம்பரங்களையும் வெளிப்படையாக செய்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட கல்வி நிர்வாகங்களும் அதிகாரிகளும் கூட கண்டு கொள்ளாமல் உள்ள நிலை, பெற்றோரையும், ஆசிரியர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஆர்வம்: இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
ஆசிரியர் தகுதித்தேர்வு பயிற்சிக்கென பலரும் சேர ஆர்வம் இருப்பது கண்டு, பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள் திடீர் பயிற்சி மையங்களை துவக்கியுள்ளனர். இவர்களின் கவனம் முழுவதும் இப்பயிற்சி மையங்களில், சேர்க்கை நடத்துவது, பயிற்சி நடத்துவது என இருப்பதால், பள்ளி வேலைகளில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. இதனால் மாணவ, மாணவியரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்டக்கல்வி அலுவலர்களும் கண்டு கொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அரசு பணி தவித்து பிற பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். மேலும், இத்தகுதித்தேர்வு முதன்முறையாக நடத்தப்படுவதால், இத்தேர்வு எழுதி யாருக்கும் அனுபவம் இருக்கப்போவதில்லை. கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தை கொண்டு, கேள்வி பதில்களை நினைவில் வைத்துக்கொள்ள பயிற்சி வழங்கு கின்றனர்.
 இப்பாடம் நடத்தும் ஆசிரியர் கூட, இப்பாடத்திட்டம் நடத்துபவராக இருப்பதில்லை. இதற்காக அதிகபட்ச கட்டணங்களையும் வசூல் செய்கின்றனர். இதற்கு பதில், உரிய பாடப்புத்தகங்களை கொண்டு, அவரவர் வீட்டிலேயே பயிற்சி செய்ய முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment