Sunday, April 22, 2012

தினமலர் டி.இ.டி., கருத்தரங்கில் நிபுணர்கள் அறிவுரை

ராஜபாளையம்: ராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜா நினைவு திருமண மண்டபத்தில் தினமலர் நாளிதழ் சார்பில், ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட்., படித்தவர்களுக்கான டி.இ.டி., வழிகாட்டு கருத்தரங்கு நேற்று நடந்தது. ஏராளமானோர் இதில் பங்கேற்று பயன்பெற்றனர். தேர்வை எதிர்கொள்வது, அதிக மார்க் வாங்கும் வழிகள் குறித்து

நிபுணர்கள் பேசியதாவது:

பொதுஅறிவு, கணிதம், சுற்று சூழலியல் குறித்து, மதுரை நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் பெ.வெங்கடாசலம்: ஆசிரியர் தகுதி தேர்வு என்பது மத்திய அரசு உத்தரவு. சட்டசபையில் தகுதி தேர்வு கட்டாயம் என அமைச்சர் பேசி உள்ளார். தேர்வை சந்தித்தே ஆகவேண்டும். டி.டி.எட்., மற்றும் பி.எட்., தகுதி தேர்விற்கு ஐந்து பாடபிரிவுகளில் 150 கேள்விகள் கேட்கப்படும். எல்லாமே கொள்குறி வகை தான். தவறான பதில்களுக்கு மார்க் குறைப்பதில்லை. பெறும் மார்க்கை பொறுத்து பணி ஒதுக்கப்படலாம். அதிக மார்க் வாங்குவது அவசியம். டி.டி.எட்., முடித்தவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள சமச்சீர் பாட புத்தகங்களை படிக்கவேண்டும். ஆறு முதல் எட்டு வகுப்பு வரை உள்ள புத்தகங்களை படித்து தெளிவு பெறவேண்டும். பி.எட்., முடித்தவர்கள் ஆறு முதல் எட்டாம் வகுப்பு சமச்சீர் பாட புத்தகங்களையும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு புத்தகங்களை யும் படிக்கவேண்டும். குழந்தை மேம்பாடு, மொழிப் பாடங்கள் பி.ஏ., பி.லிட்., பி.எஸ்சி., படிப்புகளுக்கு ஒரே மாதிரி இருக்கும். பின், பி.எஸ்.சி.,க்கு கணிதத்தின் அடிப்படை கூறுகள் மற்றும் அறிவியல் பாடங்களும், பி.ஏ., க்கு வரலாறு, புவியில் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். வரலாறை

வரிசைப்படுத்தி படிக்கவேண்டும். : புவியியல் பாடத்தில் மலை, வனவிலங்குகள், சரணாலயம் போன்றவற்றை கவனமாக படிக்கவேண்டும். மனப்பாட முறையை மாற்றி புரிந்து படிக்கவேண்டும்.மனப் பாடம் செய்து படிப்பது எதற்கும் உபயோகமாகாது. 10 மாதிரி விடைத்தாள்களை வைத்து பயிற்சி செய்வது முக்கியம். நோட்ஸ் போன்றவற்றை விட புத்தகங்களை படித்து புரிந்துகொள்ளவேண்டும்.

செந்தமிழ் கல்லூரி உதவிபேராசிரியர் செ.ராஜ்மோகன்: தமிழில் அதிக மார்க் பெற ஒன்று முதல் எட்டு வகுப்புவரை உள்ள செய்யுள் பகுதிகளை நன்றாக படிக்கவேண்டும். நூல் மற்றும் ஆசிரியர்கள், பிறமொழி கலப்பை நீக்குதல், அடைமொழி குறிப்புகள், அடைமொழி சான்றோர், பிரித்து எழுதுக போன்றவற்றில் கேள்விகள் கேட்கப்படும். வகுப்புகளுக்கு ஏற்ப சமச்சீர் புத்தகங்களை படிக்கவேண்டும். தமிழ் இலக்கிய வரலாறு, நல்ல தமிழ் எழுத வேண்டுமா போன்ற புத்தகங்களை படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம்.

நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் பாங்கிங் நிர்வாக அதிகாரி எம்.எஸ். வெங்கடாஜலபதி: ஒன்று முதல் எட்டு வகுப்பு ஆங்கில புத்தகங்களில் உள்ள பாடல்கள், அதன் ஆசிரியர்களை தெரிந்துகொள்ளவேண்டும். ஆங்கில புத்தகத்தில் பாடங்களின் பின்னால் உள்ள பயிற்சி பகுதி தான் முக்கியம். அதை கவனமாக படித்து பயிற்சி எடுக்கவேண்டும். மற்ற எளிதான பாடங்களை விரைவாக முடித்து, ஆங்கிலத்திற்கு அதிக நேரம் ஒதுக்கினால், அதிக மதிப்பெண் பெறலாம். வாக்கியம், வினைசொல் உள்ள இடம், டென்ஸ், டிகிரீஸ், அர்த்தம், எதிர்ப்பதம் போன்றவற்றை நன்றாக படிக்கவேண்டும்.

குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் குறித்து வேம்பரளி பெனியெல் கிராமிய கல்வியியல் கல்லூரி உதவிபேராசிரியர் எஸ்.பிரகாஷ்: வீட்டில் சாப்பிடாத, தூங்காத குழந்தை கூட பள்ளி சென்றால் அதை செய்கின்றன. அதற்கு காரணம் பள்ளியில் பயிற்சி. அவர்களது நடத்தையில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த படிப்பிற்கான புத்தகத்தை நன்றாக படிக்க
வேண்டும். ஆளுமை பற்றி நிறைய கேள்விகள் உள்ளன. அவற்றின் கோட்பாடுகள் முக்கியம். கல்வி உளவியல் முக்கியம். முயற்சி செய்து படித்தால் உளவியல் கேள்விகளில் முழு மதிப்பெண் பெறலாம்.

No comments:

Post a Comment