Saturday, September 22, 2012

டி.இ.டி., அக்டோபர் 14க்கு தள்ளிவைப்பு

சென்னை: அக்டோபர், 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி., மறுதேர்வு, 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள், 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

டி.ஆர்.பி., அறிவிப்பு: தேர்வரின் கோரிக்கையை பரிசீலனை செய்து, டி.இ.டி., தேர்வுக்கு, புதிய தேர்வர்களும் விண்ணப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதனால், அக்டோபர், 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி., மறுதேர்வு, 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. புதிய தேர்வர்களுக்காக, 24ம் தேதி காலை, 10 மணி முதல், 28ம் தேதி மாலை, 5:30 மணி வரை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். ஜூலையில் நடந்த டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது. இவர்களுக்குள்ள, தேர்வு மையத்தில், எவ்வித மாற்றமும் கிடையாது. புதியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலேயே வழங்க வேண்டும். நேரிடையாக, டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு அனுப்பக் கூடாது.

புதிதாக விண்ணப்பிப்பவர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திய ரசீது ஆகியவற்றை நகல் எடுத்து, நகலில் முதன்மை கல்வி அலுவலரின் கையெழுத்தை, தேதியுடன் பெற்று வைத்துக் கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த பின், விண்ணப்பத்தில், எவ்வித மாற்றமும் செய்ய முடியாது. ஏற்கனவே விண்ணப்பித்த தேர்வர், மொழிப் பாடத்தை மாற்ற விரும்பினால், 28ம் தேதிக்குள், டி.ஆர்.பி.,க்கு விண்ணப்பிக்கலாம். புதிய தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு, "ஹால் டிக்கெட்' அனுப்பப்பட மாட்டாது. டி.ஆர்.பி., இணையதளத்தில் இருந்து, "ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. பழைய தேர்வர்களுக்கு, ஏற்கனவே டி.ஆர்.பி., இணையதளத்தில், "ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது. புதிய தேர்வர்களுக்கு, அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment