Wednesday, September 19, 2012

20-09-12 அனைத்து பள்ளிகளும் செயல்படும்: கல்வித் துறை அறிவிப்பு

சென்னை, செப். 18: தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் 20-09-12 வழக்கம்போல் செயல்படும் என்று பள்ளிக் கல்வித் துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.  முன்னதாக, வேலைநிறுத்தத்தையொட்டி, அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை விடுமுறை என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.  

ஆனால், பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை முடிவு எடுக்கவில்லை எனவும், விடுமுறை தொடர்பான அறிவிப்பு தவறாக வெளியாகியுள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலையில் மறுப்பு தெரிவித்தனர். 
 தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இப்போது காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. வேலைநிறுத்த அறிவிப்பையொட்டி, இந்தத் தேர்வுகளை தள்ளிவைப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை ஆலோசித்து வந்தது.
 இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான சுற்றறிக்கை செவ்வாய்க்கிழமை காலையில் அனுப்பப்பட்டது.  அதன் விவரம்: அனைத்து வகை பள்ளிகளுக்கும் செப்டம்பர் 20-ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது. 10, 12 ஆம் வகுப்புகளுக்கு மாநிலம் முழுவதும் பொதுவான காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது.  அந்த வகுப்புகளுக்கு வியாழக்கிழமை நடைபெற இருந்த தேர்வை, இறுதி தேர்வு நாளுக்கு மறுநாள் நடத்த வேண்டும். மற்ற வகுப்புகளுக்கு நடைபெற இருந்த தேர்வை எந்த தேதியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே முடிவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
 திடீர் திருப்பம்: இதையடுத்து, சில மாவட்டங்களில் மாற்று தேர்வு தேதிகளையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவித்துவிட்டனர். இந் நிலையில், பள்ளி கல்வித் துறை செவ்வாய்க்கிழமை மாலையில் திடீரென விடுமுறை அறிவிப்பை மறுத்தது. இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் பள்ளிகள் வியாழக்கிழமை வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment