Thursday, September 6, 2012

காதுகேளாதோர் பள்ளியில் கணினி அறிவியல் பாடம் நீக்கம்

சென்னை: தருமபுரியில் உள்ள அரசு காது கேளாதோருக்கான மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 மாணவருக்கு, கணினி அறிவியல் பாடத்தை, முதலில் சேர்த்து உத்தரவிட்ட தமிழக அரசு, திடீரென அப்பாடத்தை நீக்கியுள்ளது.
தருமபுரி மற்றும் தஞ்சாவூரில் உள்ள, அரசு காது கேளாதோருக்கான மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, நடப்பு கல்வியாண்டில் இருந்து, கணினி அறிவியல் பாடத்தை நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர், ஜூலை 10ம் தேதி, இதற்கான உத்தரவை வெளியிட்டிருந்தார். அதன்படி, தஞ்சாவூர் பள்ளியில், மொழிப் பாடங்களுடன், கணக்கியல், வணிகவியல், பொருளியல் மற்றும் கணினி அறிவியல் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனால், தருமபுரி பள்ளியில் மட்டும், கணினி அறிவியல் பாடத்தை, கூடுதலாக, பகுதி நேர பாடமாக நடத்திக் கொள்ள உத்தரவிடப் பட்டுள்ளது. முக்கிய பாட வரிசையில் இருந்து, கணினி அறிவியல் பாடத்தை நீக்கி, ஆக., 31ம் தேதி, மீண்டும் ஒரு உத்தரவை, மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகம் வெளியிட்டுள்ளது. "அரசின், இந்த புதிய உத்தரவால், பிளஸ் 1 மாணவர், பெரிதும் பாதிக்கப்படுவர்" என, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் செயலர் நம்புராஜன் கூறியதாவது: செவித்திறன் குறைந்த மாணவர், சென்னை, மாநிலக் கல்லூரியில், கணினி அறிவியல் படிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. தமிழக அரசு வெளியிட்ட புதிய உத்தரவால், தருமபுரி பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர், கல்லூரியில், கணினி அறிவியல் படிப்பதற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. அப்பள்ளியில், மீண்டும் கணினி அறிவியல் பாடத்தை, முக்கிய பாட வரிசையில் சேர்க்க, தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

  1. ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் செய்திகள் என்னும் இப்பக்கத்தினை தொடங்கிவுள்ளோம். tntrbnews.blogspot.in

    ReplyDelete