Wednesday, December 21, 2011

தமிழகம் 2,623 பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம்: தபால் மூலம் பணிநியமன ஆணை

சென்னை, டிச. 20: சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவடைந்து கடந்த ஓர் ஆண்டாக காத்திருந்த 2,623 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நேரடி பணி நியமன ஆணைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.  தொடக்கக் கல்வித் துறைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள சுமார் 1,200 பட்டதாரி ஆசிரியர்களுக்கு வெள்ளி அல்லது சனிக்கிழமை பணி நியமன ஆணைகள் அனுப்பப்படும் என்று தெரிகிறது.
 மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் ஏறத்தாழ 6 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. கடந்த ஆண்டு நவம்பரில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. விடுபட்டவர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.
 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியலை மார்ச் முதல் வாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,200 பட்டதாரி ஆசிரியர்கள் உடனடியாக பணியமர்த்தப்பட்டனர். சட்டப்பேரவைத் தேர்தல், உயர் நீதிமன்ற வழக்குகள் காரணமாக மீதமுள்ள பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாக பணியமர்த்தப்படவில்லை. 

 உயர் நீதிமன்ற உத்தரவின்படி திருத்திய பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் கடந்த செப்டம்பரில் வெளியிடப்பட்டது.  இதில் சுமார் 3,900 பட்டதாரி ஆசிரியர்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் பள்ளிக் கல்வித் துறைக்கு 2,623 ஆசிரியர்களும், தொடக்கக் கல்வித் துறை, நலத் துறை மற்றும் சீர் மரபினர் பள்ளிகளுக்கு மீதமுள்ள ஆசிரியர்களும் ஒதுக்கப்பட்டனர்.  பள்ளிக் கல்வித் துறை கீழ் தேர்ந்தெடுக்கப்ட்ட ஆசிரியர்களுக்கான நேரடி பணி நியமன ஆணைகள் தபால் மூலம் திங்கள்கிழமை அனுப்பப்பட்டன. தொடக்கக் கல்வித் துறையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சில நாள்களில் பணி நியமன ஆணைகள் அனுப்பப்படும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment