Thursday, December 8, 2011

இலவச மடிக் கணினி திட்டத்தின் மூலம் அனைவருக்கும் ஒரே தரமான கல்வி

சென்னை, டிச.7: தமிழக அரசின் இலவச மடிக் கணினி திட்டம் அனைத்துப் பகுதி மக்களுக்கும் ஒரே தரமான கல்வி கிடைக்க வழிவகுக்கும் என தமிழக உயர் கல்வித் துறை செயலர் ஆர். கண்ணன் கூறினார்.

 தகவல் தொழில்நுட்பத்துக்கான உற்பத்தியாளர்கள் சங்கம் (எம்.ஏ.ஐ.டி) சார்பில் "2020-க்கு இந்தியாவைத் தயார் செய்யும் வகையில் தொழில்நுட்பத்தையும் கல்வியையும் ஒருங்கிணைத்தல்'- என்ற தலைப்பிலான ஒரு நாள் தேசிய மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில் முதன்மைச் செயலர் கண்ணன் பேசியது:
 தமிழக அரசு பிளஸ்-2 மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக் கணினி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 9.75 லட்சம் மடிக் கணினிகள் வழங்கப்பட உள்ளன. இது இந்திய மடிக் கணினி சந்தை அளவில் 50 சதவீதம் ஆகும். இதன் மூலம் பல நிறுவனங்கள் பலன் பெற உள்ளன.
 மக்களுக்கும் இதன் மூலம் உலகத் தரத்திலான கல்வி கிடைக்க உள்ளது. சென்னை, கோவை என்றில்லாமல் தமிழகத்தின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் ஒரே தரமான கல்வி கிடைக்கும்.
 அறிவுப் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், நூலக வலைதளங்கள் அனைத்தும் இதனுடன் இணைக்கப்பட உள்ளன என்றார்.

 எல்காட் நிர்வாக இயக்குநர் அதுல் ஆனந்த்: தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், அவற்றுடன் இணைந்து செயலாற்றும் வகையிலும் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிவித்து, செயல்படுத்தி வருகிறது.

 மதுரையில் ரூ. 60 கோடியில் பேரழிவு மீட்பு மையம் (டி.ஆர்.சி.) ஒன்று அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மென்பொருள்கள் மற்றும் சேவைகள் பாதுகாப்பாக பதிவு செய்து வைக்கப்படும்.
 மாவட்டங்களை மின் ஆளுமையின் கீழ் கொண்டு வரும் வகையில் ரூ. 100 கோடி மதிப்பிலான திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிதி ஒதுக்குகின்றன.
 இதுபோன்ற திட்டங்கள் தமிழக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உலக வரைபடத்தில் மிகச் சிறந்த இடத்தைப் பிடிக்க வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.
 
டி.வி.எஸ். முதலீடு நிதி நிறுவன தலைவர் கோபால் சீனிவாசன்: டி.வி., கம்ப்யூட்டர், செல்பேசி என மூன்று மின்னணுப் பொருள்களின் உற்பத்தியிலும் இந்திய நிறுவனங்கள் முத்திரை பதிக்கத் தவறிவிட்டன.
 இப்போது கடைசி வாய்ப்பாக கம்ப்யூட்டர் ஹார்டுவேர் (வன்பொருள்) உற்பத்தி உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய நிறுவனங்கள் முத்திரை பதிக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.
 தகவல் தொழில்நுட்பத்துக்கான உற்பத்தியாளர் சங்கத் தலைவர் அலோக் பரத்வாஜ்: தொழில்நுட்பத்தால் மட்டுமே கல்வியில் மாற்றத்தை உருவாக்க முடியும். புதுமைகள் இடம்பெற வில்லையெனில், இந்தியக் கல்வியின் தரம் கேள்விக்குறியாகிவிடும் என்றார்.



No comments:

Post a Comment