Friday, December 16, 2011

ஆசிரியர் பணி நியமன தேர்வில் மொழிப் பாடத்தில் கேள்வி

சென்னை, டிச.16:
ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதித் தேர்வில், தமிழ், ஆங்கில பாட ஆசிரியர்கள் சமூக அறிவியல் எழுத வேண்டியதில்லை. அதற்கு பதிலாக அந்தந்த பாடங்களில் இருந்தே கேள்விகள் கேட்க அரசு முடிவு செய்துள்ளது.
ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக அரசு பிறப்பித்து வருகின்ற ஆணைகள் மூலம் பட்டதாரிகள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு உண்டா, இல்லையா என்பது முதல் குழப்பம். டிஇடி தேர்வா அல்லது டிஆர்பி தேர்வா, இரண்டு தேர்வு எழுதிய பிறகும் சான்று சரிபார்ப்பு உண்டா என்பது உள்ளிட்ட பல்வேறு குழப்பங்களில் இடைநிலை, பட்டதாரிகள் உள்ளனர்.
எந்த தேர்வை நடத்த வேண்டும் என்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு இதுவரை உத்தரவு வரவில்லை. தேர்வு என்றால் எந்த தேர்வு முதலில் நடக்கும் என்பதும் தெளிவாகவில்லை. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் சமீபத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், ஏற்கெ னவே, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ள அம்சங் களை கடைபிடிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால், தகுதித் தேர்வு குறித்து என்சிடிஇ தெரிவித்துள்ள அம்சங்களில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். அதன்படி, தமிழ், ஆங்கிலம் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் கணக்கு, அறிவியல் அல்லது சமூக கல்வி ஆகிய ஏதாவது ஒன்றின் கீழ் 60 மதிப்பெண்களுக்கு கேள்வி கேட்க வேண்டும் என்று இருப்பதை மாற்றி, தமிழ் மற்றும் ஆங்கில பாடத்தில் இருந்தே 60 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்க உள்ளனர். தகுதித் தேர்வு குறித்து மார்ச்சில் அறிவிப்பு வெளியிட்டு, மே மாதம் தேர்வு நடத்தலாம் என்றும் உத்தேசித்துள்ளனர். ஆனால், குறைந்த கால அவகாசத்தில் தகுதித் தேர்வை நடத்த முடியாது என்ற ஒரு கருத்தும் உள்ளது. அதனால், நேரடியாக ஆசிரியர் தேர்வு வாரிய எழுத்துத் தேர்வை இந்த ஆண்டு நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
இதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ள தேர்வுக்கான வினாத்தாளில் 50 சதவீதம் கடினமான கேள்விகளை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் கிராமப்புற மாணவர்கள் இந்த எழுத்துத் தேர்வில், பணி நியமனத்துக்கு தேவையான அதிக மதிப்பெண்களை பெறுவது மிகவும் கடினம். அதனால் கிராமப் பகுதியை சேர்ந்த மாணவர்கள் குறைந்த சதவீதமே இனிமேல் பணி நியமனம் பெறுவார்கள்.
இந்நிலையில், கடந்த முறை தேர்வு செய்யப்பட்ட பட்டதாரிகளில் விடுபட்டவர்கள் 518 பேருக்கும், முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கான கடந்த ஆண்டு ஏற்பட்ட காலி இடங்களில் 1,260 பேரும், தற்போது பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment