Tuesday, December 27, 2011

பட்டதாரி ஆசிரியர்கள் வழக்கு

சென்னை, டிச. 26: பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்துக்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இது தொடர்பாக அனைத்து பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் அதன் தலைவர் கே. ரத்தினகுமார் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: 

 தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியர்கள் மாநில அளவிலான வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையிலேயே பணி நியமனம் செய்யப்பட்டு வந்தனர்.  கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 28 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் இந்த அடிப்படையிலேயே பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 8 ஆயிரத்து 100 பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் முடிந்த நிலையில், பணி நியமன ஆணையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும் என்றும், அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே இனி ஆசிரியர்கள் நியமனம் நடைபெற வேண்டும் என்றும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.  இதன் அடிப்படையில் தமிழகத்திலும் இனி ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமே பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கடந்த நவம்பர் 15-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
பட்டப் படிப்பை முடித்து, குறிப்பிட்ட துறையில் ஆசிரியர் கல்விக்கான பட்டமும் (பி.எட்) பெற்று, உரிய தகுதிகளுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு, ஆசிரியர் பணி கிடைக்கும் என்று பல ஆண்டுகளாக நம்பிக்கையுடன் காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு எதிராக இந்த அரசாணை உள்ளது. இது சட்ட விரோதமானதாகும்.  எனவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். 
மாநில அளவிலான வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி கே. சுகுணா முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக தமிழக அரசின் கல்வித் துறை, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஆகியவை இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment