Saturday, December 24, 2011

இரட்டை தேர்வு முறைக்கு எதிர்ப்பு: பட்டதாரிகள் உண்ணா விரதம்

சென்னை : ஆசிரியர் பணி நியமனத்துக்காக கொண்டு வந்துள்ள இரட்டை தேர்வு முறையை அரசு ரத்து செய்யாவிட்டால் மாபெரும் உண்ணா விரதம் இருக்க பதிவு மூப்பு பட்டதாரிகள் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில செயலாளர் மனோகர், பொருளாளர் அய்யாதுரை மாநில தலைவர் ரத்தினக்குமார் ஆகியோர் நேற்று நிருபர்களை சந்தித்தனர்.
அப்போது ரத்தினகுமார் கூறியதாவது:

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் பதிவு மூப்பு அடிப்படையில் நடந்தது. இந்த முறையை மாற்றி தகுதி தேர்வு, போட்டி தேர்வு என இரட்டை தேர்வு முறையை அரசு கொண்டு வந்துள்ளது. அந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்குத்தான் பணி நியமனம் என்றும் அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 20 ஆண்டுகளாக காத்திருக்கும் பட்டதாரிகளும், அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்படுவார்கள்.

 டி.என்.பி.எஸ்.சி.,யில் மாபெரும் ஊழல் நடந்துள்ளது போல இப்போது பெரிய அளவில் ஊழல் நடக்க இந்த இரட்டை தேர்வு முறை வாய்ப்பாக இருக்கும். இதனால் ஏற்கெனவே சான்று சரிபார்ப்பு முடித்து காத்திருக்கும் 8000 பேருக்கும் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். இது தவிர வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் 25000 பேர் உள்ளனர். 

அவர்களுக்கும் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். தமிழக அரசு, இரட்டை தேர்வு முறையை ரத்து செய்யாவிட்டால் 28ம் தேதி சென்னை காயிதே மில்லத் கல்லூரியின் பின்புறம் மாநிலம் தழுவிய உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். அதற்கு பிறகும் அரசு கண்டுகொள்ளாவிட்டால்,நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்.
இவ்வாறு ரத்தினகுமார் தெரிவித்தார்

No comments:

Post a Comment